கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் அக்சர் பட்டேல் பேட்டிங் வரிசையில் நான்காவது அல்லது ஐந்தாவது வீரராக களமிறங்கி வந்தார்.
ஆனால் அவர் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அவரை டீபுரோமட் செய்து கம்பீர் கீழே அனுப்பினார். இதனால் இன்று பேட்டிங்கில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 11 பந்துகளில் 21 ரன்கள் அவர் சேர்த்தார். பந்துவீச்சில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்சர் பட்டேல், நான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். இதன் மூலம் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் பேட்டிங் செய்யும்போது அறிந்தேன்.
அது மட்டுமில்லாமல் சில பேட்டர்களிடம் ஆடுகளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்தும் கேட்டு அறிந்தேன். பந்து பேட்டிற்கு நன்றாக வரவில்லை என்றும் சில சமயம் எதிர்பார்க்காத அளவு பந்து பவுன்ஸ் ஆவதாகவும், ஆடுகளம் தொய்வாக மாறுவதாகவும் அவர்கள் கூறினார்கள். எனவே பந்தை பெரிய ஷாட் அடிப்பதற்காக முன்கூட்டியே தயார் நிலையில் நின்று பந்தை அடித்தேன். எனக்கு பேட்டிங் வரிசை பெரிய முக்கியம் கிடையாது.
அணி என்ன சொல்கிறதோ அதை நான் செய்ய தான் இங்கு இருக்கின்றேன். அணியில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம். அணி என்னிடம் எதிர்பார்க்கிறதோ அதை செய்ய வேண்டும். பேட்டர்கள் பெரிய ஷாட் ஆட என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்து விட்டது. இதனால் அதற்கு ஏற்றார் வகையில் என்னுடைய பந்துவீச்சு முறையில் மாற்றம் செய்தேன். இதன் காரணமாக மிடில் ஸ்டம்பை நோக்கி நல்ல லெங்தில் பந்து வீசினேன். இந்தத் திட்டம் எனக்கு நல்ல முறையில் கை கொடுத்தது என்று அக்சர் பட்டேல் கூறினார்.