மும்பை; முகமது ஷமி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அவரை ஆஸ்திரேலிய தொடருக்கு கடைசி வரை தேர்வு செய்யப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் தான் முகமது ஷமி கடைசியாக விளையாடி இருந்தார்.
அதன் பின் காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவர் ஓய்வில் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர் ரஞ்சி டிராபி போட்டியில் நீண்ட காலத்துக்குப் பின் பங்கேற்றார். நீண்ட ஓய்வுக்கு பின் தான் ஆடிய முதல் போட்டியிலேயே 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதை அடுத்து அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பார், விரைவில் அந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்றும், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விளையாடுவார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்படு வந்தன.
அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இருந்து விளையாட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் கூறி இருந்தனர். ஆனால், அது எதுவும் நடக்கப் போவதில்லை என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி முகமது ஷமி தொடர்ந்து ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். அவரது காயம் முழுமையாக குணமாகி விட்டதா? அவர் முழு உடற் தகுதி பெற்றுவிட்டாரா? என்பதை உறுதி செய்யாமல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரை சேர்க்க முடியாது எனவும், பாதி தொடரில் அவரை சேர்ப்பது சரியாக இருக்காது என்பதாலும் அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பும்ராவை தவிர அனுபவ பந்துவீச்சாளர்கள் என யாரும் இல்லை. முகமது சிராஜ் இருந்தாலும் அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஆகாஷ்தீப், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க முடிவு செய்து இருக்கிறது.
அனுபவ வேகப் பந்துவீச்சாளருக்கான தேவை இருந்தும் முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து உள்ளது.