மும்பை: இதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்த ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு கூட அளிக்கப்படாத அதிகாரம் ஒன்று கவுதம் கம்பீருக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அப்படி பல்வேறு அதிகாரங்களை பெற்று இருந்தும் அவர் இந்திய அணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்ற நிலை இருந்தது. அவர்கள் அணித் தேர்வு பற்றி தங்கள் கருத்துக்களை மட்டுமே கூற முடியும். ஆனால், அணியை இறுதி செய்யும் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது.

தேர்வுக் குழுவினர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். ஆனால், கவுதம் கம்பீர் முக்கிய தொடர்களின் அணித் தேர்வின் போது தனக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என கேட்டதாகவும் பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வில் கவுதம் கம்பீர் சில வீரர்களை தன்னிச்சையாக தேர்வு செய்து இருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹர்ஷித் ரானா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இரண்டு ஐபிஎல் வீரர்களை அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்து இருக்கிறார். அவர்கள் இருவரும் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்கள். அடுத்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் விளையாடும் அளவுக்கு அவர்களுக்கு அனுபவம் இல்லை.
அவர்கள் இருவரும் மிகச் சில உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருக்கிறார் கம்பீர். இது தவறான முடிவு என தெரிந்தும் கம்பீருக்கு அணித் தேர்வில் அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்ததால் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் தேர்வு குழு அமைதியாக இருந்துள்ளது.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வி அடைந்து இருப்பதால் கம்பீர் எடுத்த அணித் தேர்வு முடிவு சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நீண்ட காலமாக வர்ணனையாளராக செயல்பட்டு, ஒவ்வொரு இந்திய அணி போட்டியையும் நெருக்கமாக கவனித்து வரும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து இருக்கிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல் முறை வென்ற போது அவரே பயிற்சியாளராக இருந்தார். அடுத்து இந்திய அணியை அடுத்தடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்து சென்று, அதில் டி20 உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் இல்லாத அதிகாரம் கவுதம் கம்பீருக்கு அளிக்கப்பட்டு இருப்பது சரியா? பிசிசிஐ தான் விதித்த விதிகளை தானே மீறுவது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் அவருக்கான அதிகாரம் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.