சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாதி தொடரிலேயே ஓய்வை அறிவித்து அணியை விட்டு வெளியேறியது ஏன்? என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ விளக்கம் கேட்க உள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அது குறித்து விவாதிக்க கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க உள்ளனர்.

அவர்களிடம் இந்திய அணியின் தோல்வி குறித்தும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும், கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விலகியது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட உள்ளன. ஆனால், இந்த நடைமுறை கேள்விகளை தாண்டி அஸ்வின் ஓய்வு பெற்ற விவகாரத்தையும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதுதான் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அஸ்வின் ஓய்வு பெற்றது இதுவரை சாதாரண விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், அதன் பின்னணியில் நடந்தது என்ன? உண்மையிலேயே அஸ்வின் அவராக ஓய்வை அறிவித்தாரா? அல்லது இந்திய அணியில் மறைமுகமாக அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்பது பற்றி பிசிசிஐ விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
ஏனெனில், ஒரு மூத்த வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்ட பின் பாதி தொடரில் விலகுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஓய்வு பெறும் முடிவில் இருந்தால் அந்த டெஸ்ட் தொடருக்கு முன்பே அதை தேர்வு குழுவினரிடம் தெரிவித்திருப்பார். ஒருவேளை பாதி தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், அந்தத் தொடரின் முடிவில் தான் ஓய்வை அறிவித்து இருப்பார்.
ஆனால், அஸ்வின் ஓய்வு விவகாரம் பற்றி வெளியாகும் செய்திகளில் ஒரு முக்கிய விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போதே ஓய்வு பெறும் முடிவை எடுத்து விட்டார் என்பது தான் அது. அதன் பின்னர் திடீரென இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்டார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்து விலகினார். இந்த மூன்று போட்டிகளின் போது என்ன நடந்தது? அஸ்வின் ஏன் பிடிவாதமாக பாதி தொடரில் ஓய்வு பெறும் முடிவை எடுத்தார்? இந்திய அணி நிர்வாகத்தில் யாரேனும் அவருக்கு இனி அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறினார்களா? அவரை ஓய்வு பெறும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்தார்களா? என்ற கேள்வி உள்ளது.
அஸ்வின் தனது ஓய்வு குறித்து ஊடகங்களில் பேசுகையில் எல்லாம் நல்ல விதமாக இருப்பது போலவே பேசி வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயம் மறைக்கப்படுகிறது என்ற சந்தேகம் உள்ளது. இன்னும் சில தினங்களில் நடக்க உள்ள பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் பங்கேற்கும் கூட்டத்தில் அது வெளி உலகத்திற்கு தெரிய வருமா? எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.