பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரை நேரலையில் ஒளிபரப்ப உள்ள ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் கேப்டன் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.
அந்த தொலைக்காட்சி இந்த டெஸ்ட் தொடருக்காக பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்திலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் புகைப்படம் மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. விராட் கோலி முன்னணி வீரர் என்றாலும் நியாயமாக பார்த்தால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் புகைப்படத்தை பயன்படுத்தும் போது, மறுபுறம் அவருக்கு இணையாக இந்திய கேப்டனின் புகைப்படத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரது புகைப்படத்தை அந்த தொலைக்காட்சி பயன்படுத்தி இருக்கிறது. விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அல்லது அவரை முக்கிய வீரராக மக்கள் கருதுகிறார்கள் என்றால் சில போஸ்டர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ரோஹித் சர்மா புகைப்படங்களையும், சில போஸ்டர்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலியின் புகைப்படங்களையும் இணைத்து பயன்படுத்தி இருக்கலாம்.
ஏனெனில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஒருவரது சாதனைகளை ஒருவர் மாற்றி, மாற்றி முந்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவதால் அவர்கள் இருவரது புகைப்படங்களையும் இணைத்து விளம்பரம் செய்திருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே ரோஹித் சர்மாவை புறக்கணித்து இருப்பதன் மூலம் அவரது முக்கியத்துவத்தை அந்த தொலைக்காட்சி குறைத்து மதிப்பிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுவதால் விராட் கோலியின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கலாம் என சிலர் கூறினாலும், அப்போதும் தற்காலிக கேப்டன் பும்ராவின் புகைப்படத்தை தான் விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே சமயம் விராட் கோலியின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். விராட் கோலி தான் இந்திய அணியின் அறிவிக்கப்படாத கேப்டன் எனவும், அவர் தான் "இந்திய அணியின் முகம்" என்றும் அவர்கள் சமூக வலை தளங்களில் ரோஹித் சர்மா ரசிகர்களை சீண்டி வருகின்றனர்.
ஆனால், செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, இருவரும் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் 6 இன்னிங்ஸ்களில் நூறு ரன்களைக் கூட தாண்டவில்லை. ரோஹித் சர்மா வேகப் பந்து வீச்சை சந்திப்பதிலும், விராட் கோலி சுழற் பந்து வீச்சை சந்திப்பதிலும் பலவீனமாக உள்ளனர். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.