பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா 53 விக்கெட்கள் வீழ்த்தி வரலாற்று சாதனையை செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய மண்ணில் கபில் தேவ் 51 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே இதற்கு முன் சாதனையாக இருந்தது. அதை பும்ரா முறியடித்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா அபாரமாக செயல்பட்டு மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அப்போது பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சிராஜ் 2 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் தலா 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கினார். இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 53 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் பும்ரா.
இதை அடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். முன்னதாக இந்திய ஜாம்பவான் கபில் தேவ் ஆஸ்திரேலிய மண்ணில் 51 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்களாக இருந்தது.
அந்த சாதனையை பும்ரா முறியடித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் கபில் தேவின் பவுலிங் சராசரி 24.58 ஆகும். ஆனால், பும்ரா 17.21 என்ற பவுலிங் சராசரியுடன் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதை அடுத்து பலரும் பும்ராவின் அசாத்தியமான இந்த சாதனையை புகழ்ந்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.