மொஹாலி : தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீன் தன் அணி வீரரை ரன் அவுட் செய்யப் பார்த்தார். ஆனால், அவரே பின் ரன் அவுட் ஆனார்.
இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மொஹாலியில் தன் முதல் போட்டியில் ஆடியது.

இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது. அடுத்து டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தும், ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
அவர்களை அடுத்து மார்னஸ் லாபுஷேன், கேமரான் கிரீன் பேட்டிங் செய்தனர். அப்போது 23வது ஓவரின் முதல் பந்தை லாபுஷேன் தட்டிவிட்டு வேகமாக ரன் ஓடி வந்தார். ஆனால், எதிர்முனையில் இருந்த கேமரான் கிரீன் ரன் ஓடாமல் நின்றபடி இருந்தார். அதற்குள் லாபுஷேன் பாதி தூரத்திற்கும் மேல் வந்துவிட்டார்.
பின் கிரீன் அவரை திரும்பி செல்லுமாறு சைகை காட்டினார். லாபுஷேன் ஓடுவதற்குள் பந்தை எடுத்த சூர்யகுமார் யாதவ் விக்கெட் கீப்பர் திசையை நோக்கி எறிந்தார். ராகுல் பந்தை பிடிக்க தவறவே, ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார் லாபுஷேன்.
லாபுஷேன்-ஐ ரன் அவுட் ஆக்கப் பார்த்த கேமரான் கிரீன் பின்னர் 40வது ஓவரின் போது இதே முறையில் ரன் அவுட் ஆனார். லாபுஷேன் 39 ரன்களில் ஆட்டமிழந்த பின், ஜோஷ் இங்கிலிஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
40வது ஓவரின் மூன்றாவது பந்தை கிரீன் தட்டி விட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். ஆனால், ஒரு ரன் ஓடி முடித்த இங்கிலிஸ் பந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படியே நின்று விட்டார். இரண்டாவது ரன்னுக்கு ஓடி வந்த கிரீன், இங்கிலிஸ் அங்கேயே நிற்பதை கண்டு மீண்டும் தன் எதிர் திசைக்கு ஓடினார். ஆனால், அதற்குள் சூர்யகுமார் யாதவ் அவரை ரன் அவுட் செய்தார்.
கேமரான் கிரீன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது.