சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. கேப்டனான பின் பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, பொறுப்பின்றி ஆட்டமிழந்ததோடு, கேப்டனாகவும் பல்வேறு தவறான முடிவுகளை எடுத்து விமர்சனத்தை பெற்று வருகிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டம் காரணமாக இந்திய அணி மகத்தான வெற்றியை பெற்று அசத்தியது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் கம்பேக் காரணமாக இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். ஏனென்றால் 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து சுப்மன் கில் 43 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
ஏற்கனவே வெளிநாட்டு மைதானங்களில் சுப்மன் கில்லுக்கு விளையாட தெரியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதனை இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மூலமாக மாற்றிக் காட்டினார். ஆனால் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் மீண்டும் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் அல்லது வேகம் இருந்தாலும், எளிதாக சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் சுப்மன் கில்லின் ரெக்கார்ட் படுமோசமாக உள்ளது. தற்போது புதிய பொறுப்பு கிடைத்த பின் மாற்றுவார் என்று நம்பப்பட்ட நிலையில், அது இன்னும் மோசமாகி இருக்கிறது. அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார்.
ஏனென்றால் முதல்நிலை ஸ்பின்னர் இல்லாமல் எப்போதும் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியதே இல்லை. ஆனால் கம்பீரின் ஆதிக்கம் காரணமாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் சுப்மன் கில் களமிறங்கிவிட்டார். குல்தீப் யாதவின் தேவை குறித்து இந்தியாவே ஒரே குரலில் கூப்பாடு போட்ட போதும், அவர் செவி சாய்க்கவில்லை. இறுதியாக கடைசி போட்டியில் குல்தீப் யாதவை கொண்டு வந்து வெற்றி பெற்றார்.
அதேபோல் சுப்மன் கில்லுக்கு இன்னும் வீரர்களின் திறமையை மதிப்பிட தெரியாமல் திணறி வருகிறார். ஹர்சித் ராணா எப்போதும் மிடில் ஓவர்களில் பவுலிங் செய்யக் கூடியவர். அவருக்கு ஓபனிங் ஸ்பெல்லை கொடுக்க சுப்மன் கில் முடிவு செய்தது ஏன் என்பது இப்போதும் தெரியவில்லை. மாறாக நல்ல வேகம் இருக்கக் கூடிய பிரசித் கிருஷ்ணாவை தாமதமாக அட்டாக்கில் கொண்டு வருகிறார்.
இதனால் பயிற்சியாளர் கம்பீர் ஓய்வறையில் கொடுக்கும் திட்டத்தை செயல்படுவதில் மட்டுமே குறியாக இல்லாமல், சுப்மன் கில் பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனை அடுத்தடுத்த தொடர்களில் சுப்மன் கில் மாற்றிக் கொள்ளவில்லை என்றால், கேப்டன்சி பொறுப்பே அவருக்கு மிகப்பெரிய சிக்கலாகிவிடும் என்று பார்க்கப்படுகிறது.