இந்தூர்: 360 நாட்களுக்கு பின் கிரிக்கெட் களம் திரும்பியுள்ள முகமது ஷமி, மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் பெங்கால் அணிக்காக களமிறங்கியுள்ளார். இதனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
360 நாட்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பைத் தொடரின் போது காலில் காயமடைந்த முகமது ஷமிக்கு, லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் 7 மாதங்கள் ஓய்வில் இருந்த முகமது ஷமி, பின்னர் என்சிஏவில் பயிற்சியை தொடங்கினார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே இந்திய அணிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூட முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலமாக முகமது ஷமி இன்னும் முழுமையான ஃபிட்னஸை எட்டவில்லை என்று அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் முகமது ஷமி ரஞ்சி டிராபி தொடரில் களமிறங்கி இருக்கிறார். மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி களமிறங்கி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலமாக முகமது ஷமி தனது ஃபிட்னஸை நிரூபிக்க முடியும். அதேபோல் இந்த ஆண்டில் நடக்கும் கடைசி ரஞ்சி டிராபி சுற்றுப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கு பின் எந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரிலும் முகமது ஷமி விளையாட வாய்ப்பில்லை. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட பயணிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டி மட்டுமே நவ.22ஆம் தேதி தொடங்கவுள்ளது. பின்னர் 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 மற்றும் 3வது டெஸ்ட் டிச.14 ஆகிய தேதிகளிலும் நடக்கவுள்ளது. பின்னர் 4வது டெஸ்ட் போட்டி டிச.26ஆம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதியும் நடக்கவுள்ளது. இதனால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டாலும், முகமது ஷமியால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் தாராளமாக விளையாட முடியும்.
ஏற்கனவே முகமது ஷமியின் இடத்தில் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ரிசர்வ் வீரர்களாக கலீல் அஹ்மத், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருக்கின்றனர். இவர்களை கடந்து முகமது ஷமி இந்திய அணிக்குள் செல்வது கடினம் என்றாலும், அவரிடம் இருக்கும் அனுபவம் இந்திய அணிக்கு கட்டாயம் தேவையாக உள்ளது. இதனால் பிசிசிஐ நிச்சயம் சில முடிவுகளை மாற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.