பெர்த்: ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் சிறந்த தொடக்கமான 191 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப் அமைத்த சுனில் கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் சாதனையை 34 ஆண்டுகளுக்கு பின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும் முறியடிப்பார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 2வது நாள் ஆட்டத்தில் 2 செஷன்கள் முழுவதும் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி விளையாடியது. மொத்தமாக விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்களின் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் வெளிநாட்டு மண்ணில் கடைசி 20 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணியின் சிறந்த தொடக்க சாதனையை கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி முறியடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் எஸ்சிஜி மைதானத்தில் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுனில் கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் இணைந்து 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இன்று வரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் சிறந்த தொடக்க பார்ட்னர்ஷிப் இதுதான். இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
இன்னும் 20 ரன்கள் எடுத்தால், ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுலின் பார்ட்னர்ஷிப் 192 ரன்களை எட்டிவிடும். இதன் மூலமாக 38 ஆண்டு கால சாதனையை முறியடிக்க முடியும். அதேபோல் 3வது நாளில் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினால், ஏராளமான சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
1912ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஹாப்ஸ் - வில்லியம் ரோட்ஸ் கூட்டணி 323 ரன்கள் விளாசியதே சிறந்த தொடக்கமாக உச்சத்தில் உள்ளது. இந்த நூற்றாண்டில் 2004ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேத்யூ ஹெய்டன் - ஜஸ்டின் லாங்கர் இருவரும் 255 ரன்கள் விளாசினர். இதனால் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி நாளை இந்த சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.