துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரை இறுதி போட்டியில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து அரங்கேறி உள்ளன. இன்றைய போட்டியில் கள நடுவராக ரிச்சர்ட் இல்லிங்வர்த் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட போது பல ரசிகர்கள் அச்சச்சோ இவரா என்பது போல் கதி கலங்கி இருந்தனர்.
அதற்கு ஏற்றார் போல் இன்று வீரர்களிடம் ரிச்சர்ட் கராராக நடந்து கொண்டது ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. ரிச்சர்ட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக பல தவறான முடிவுகளை வழங்கி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

இந்த சூழலில் டிராவிஸ் ஹெட், இந்தியாவிற்கு எதிராக அதிரடியாக விளையாடி வந்தார். அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸர் லைன் அருகே நின்று கொண்டிருந்த கில் ஓடி வந்து கேட்ச் பிடித்தார். கில் ஓடி வந்து பிடித்துவிட்டு, அதனை வெற்றி கொண்டாட்டத்தில் தூக்கி எறிந்தார்.
அப்போது கில்லை அழைத்த நடுவர் ரிச்சர்ட், கேட்சை பிடித்து விட்டு பந்தை உடனே தூக்கி எறிய கூடாது. அவ்வாறு செய்தால் அதற்கு நாட் அவுட் வழங்கி விடுவேன் என்று கூறினார். இதற்கு கொஞ்ச நேரம் ஓடிவிட்டு தான் பந்தை தூக்கி எறிந்தேன் என்று கில் விளக்கம் அளித்தார். எனினும் இதற்கு ரிச்சர்ட் அவுட் வழங்கிய நிலையில், கில் இடம் அவர் எச்சரிக்கை விடுத்தது ரசிகர்களை கடுப்படைய செய்தது.
இது குறித்து ஐசிசி விதி என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஒரு கேட்சை சரியாக வீரர் நிறைவு செய்ய வேண்டும். கேட்ச்சை நிறைவு செய்து விட்டு பந்தை மூன்று வினாடிகள் ஆவது வைத்திருக்க வேண்டும். இதனை கில் சரியாக செய்த நிலையில் நடுவர் தேவையில்லாமல் இந்திய வீரர்களிடம் வம்பு இழுப்பது போல் நடந்து கொண்டார். ஏற்கனவே ஜடேஜா பந்து வீசும் போது கையில் இருக்கும் கட்டை நீக்குங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.