மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அந்த தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என புஜாரா எதிர்பார்த்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார் புஜாரா. அப்படி இருந்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து அவர் இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் இந்தி பதிப்பில் புஜாரா வர்ணனையாளராக செயல்பட இருப்பது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணியை "பிளந்து கட்ட" வேண்டிய புஜாரா வர்ணனையாளராக மாறி இருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே 45 இன்னிங்ஸ்களில் 2074 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் சராசரி 49.38 ஆகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களை அடித்து இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் 993 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதன் சராசரி 47.28 ஆகும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் 2657 பந்துகளை ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்து இருக்கிறார். சராசரியாக ஒரு இன்னிங்ஸ்க்கு 126 பந்துகளை சந்தித்து இருக்கிறார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய திணறிவரும் நிலையில் புஜாராவின் இந்த செயல்பாடு குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நேரம் களத்தில் நிற்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. கடந்த நான்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றதில் புஜாராவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வெல்வதற்கு புஜாரா முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் இப்போதும் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் அவரது வயது மற்றும் நிதானமான பேட்டிங் ஆகியவற்றை சுட்டிக் காட்டி அவரை இந்திய அணி அவரை புறக்கணித்து உள்ளது. அதனால் அவர் வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.