மும்பை: அடுத்த மாதம் துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூத்த வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார் புஜாரா.
103 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவ வீரரான அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். ஆனால், சுப்மன் கில்லின் ஆட்டம் நிலையானதாக இல்லை. சில போட்டிகளில் மட்டுமே அவர் ரன் குவித்து வருகிறார்.

மேலும், அடிக்கடி அவருக்கு காயம் ஏற்பட்டு போட்டிகளில் ஆட முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் புஜாரா சமீபத்தில் நடந்த ரஞ்சி ட்ராபி டெஸ்ட் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி இரட்டை சதம் அடித்து இருந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் இடம் பெறாத போதும் இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அளவில் நடக்கும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி ரன் சேர்த்து வருகிறார்.
மேலும் 2018 - 19 மற்றும் 2020 - 21 ஆகிய இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களிலும் புஜாரா அதிக ரன் குவித்து இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிப்பது அசாதாரணமான சாதனை. புஜாரா 2018 - 19 தொடரில் 521 ரன்களும், 2020 - 21 தொடரில் 271 ரன்களும் குவித்து இருந்தார்.

அந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக புஜாரா மிகவும் நிதானமாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் அவர் ரன் குவிப்பதை தாண்டி, நீண்ட நேரம் களத்தில் நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதிப்பார். அது அவருடன் கூட்டணி அமைத்து பேட்டிங் செய்யும் மற்ற இந்திய பேட்ஸ்மன்களுக்கு எளிதாக இருக்கும்.
இது போன்ற அணுகுமுறையை தற்போது இந்திய அணியில் யாரும் கடைபிடிப்பதில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் கடுமையானது என்பதால் புஜாராவின் அனுபவம் மற்றும் நிதான ஆட்டம் அவசியம் என்பதை பிசிசிஐ உணர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், புஜாராவை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்தால் இத்தனை ஆண்டுகளாக ஏன் புஜாராவை அணியில் இருந்து விலக்கி வைத்தீர்கள்? என்ற கேள்வியை பிசிசிஐ எதிர்கொள்ள நேரிடும்.