மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கோமாளி கோலி என புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலக கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக விளங்கும் வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும் தான்.
தற்போது பெரிய அளவில் ஃபார்மில் இல்லை என்றாலும் விராட் கோலியின் சாதனைகள் காலம் முழுவதும் பேசும். இந்த சூழலில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ஊடகங்களும் கிங் கோலி வருகிறார் என்று அவருக்கு உச்சகட்ட வரவேற்பு வழங்கினார்கள்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலியை கொண்டாடியதை நமது இந்திய ஊடகங்களும் செய்தியாக பதிவிட்டு இருந்தார்கள். ஆனால் ஒரே மாதத்தில் விராட் கோலி களத்தில் நடந்து கொண்ட விதத்தால் அவருடைய இமேஜ் தலைகீழாக மாறி இருக்கிறது. குறிப்பாக மெல்போர்ன் விமான நிலையத்தில் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா ஊடக நிபுணர்களுக்கு விராட் கோலி கோரிக்கை விடுத்தார்.
மேலும் விமான நிலையத்தில் செய்தியாளர் ஒருவரிடம் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இந்த நிலையில் விராட் கோலி மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாஸை களத்தில் தேவையில்லாமல் மோதினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் விராட் கோலியின் இந்த செயலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக சாடி வருகின்றனர். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா என்ற செய்திதாள் ஒன்று விராட் கோலி புகைப்படத்தை கோமாளி போல் மார்ஃபிங் செய்து clown கோழி என தலைப்பு வைத்திருக்கிறது. இதேபோன்று மற்றொரு ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை அழுகுணி குழந்தை என குறிப்பிட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்களில் இந்த செயலுக்கு ரவி சாஸ்திரி மற்றும் கவாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இம்முறையும் நாம் தொடரை வெல்ல முடியவில்லை என்ற விரக்தியில் வேண்டுமென்றே விராட் கோலியை தாக்கி ஆஸ்திரேலியா ஊடகங்கள் இவ்வாறு செய்வதாக ரவி சாஸ்திரி குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால் ஒட்டுமொத்த நாடும் இந்திய வீரர்களை தாக்கி விமர்சனம் செய்வதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கவாஸ்கரும் ஆஸ்திரேலியா ஊடகங்களில் இந்த வரம்பு மீறிய செய்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.