மெல்போர்ன்: இந்திய அணியின் இளம் வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அசத்தலாக விளையாடி இந்திய அணியை கம்பேக் கொடுக்க வைத்துள்ளனர். ரசிகர்கள் பலரும் அவர்களை பாராட்டி வரும் நிலையில், இருவரையும் பிடிவாதமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்தது கம்பீர் என்பது தெரிய வந்துள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 310 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடுமா என்று பார்த்த போது, 2 வீரர்கள் இணைந்து ஒட்டு மொத்த ஆட்டத்தையும் திருப்பியுள்ளனர்.

நட்சத்திர ஆல்ரவுண்டர்களான நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கிறார். அதேபோல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அட்டகாசமான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். இதனால் இந்திய அணி 3வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களுடன் களத்தில் உள்ளது. 116 ரன்கள் பின் தங்கியிருந்தாலும், ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
இவர்கள் இருவரும் இணைந்து அமைத்த 127 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் மொத்த ஆட்டமும் மாறியுள்ளது. இதனால் ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே அவர்கள் ரசிகர்கள் பாராட்டு பயிற்சியாளர் கவுதம் கம்பீர்-க்கும் செல்ல வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் காபா டெஸ்ட் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தருக்கு தான் இந்திய அணியில் இடம் என்று கம்பீர் முடிவு செய்திருந்தார்.
இதன் காரணமாகவே அஸ்வின் 3வது டெஸ்ட் உடன் ஓய்வை அறிவித்து விலகினார். அஸ்வின் போன்ற ஜாம்பவான் வீரரை விடவும் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் ஆதரவு அளித்தார். வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் இன்னும் முன்னேற வேண்டும் என்றாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் கம்பீருக்கு இருந்த பிடிவாதம் தான் இன்று இந்திய அணியை காப்பாற்றியுள்ளது.
அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டியை தேர்வு குழுவினரிடம் சண்டை போட்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்தவர் கம்பீர் தான். இதனை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அதேபோல் இந்தியா ஏ அணியுடன் நிதிஷ் குமார் ரெட்டியை முன்னதாகவே அனுப்பி வைத்து பயிற்சி பெற வைத்தார்.
துலீப் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டி விளையாடி இருந்தாலும், பெரிதாக சோபிக்கவில்லை. அதன்பின் வங்கதேச டி20 தொடரில் மட்டுமே நிதிஷ் குமார் ரெட்டியை கம்பீர் நேரடியாக பார்த்தார். பெரிய அனுபவம் இல்லாத ஒரு வீரரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த போது, பெஞ்சில் இருக்க போகிறார் என்றே ரசிகர்கள் கணித்திருந்தனர். ஆனால் முதல் டெஸ்டிலேயே அறிமுகம் செய்து கம்பீர் அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் முதல் போட்டியிலேயே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட நிதிஷ் குமார் ரெட்டி, இப்போது அனைவரும் வியக்கும் அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் கூட சுப்மன் கில் போன்ற சூப்பர் ஸ்டார் வீரரை பெஞ்ச் செய்து, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் பிளேயிங் லெவனில் சேர்த்தது கம்பீர் தான். இதனால் ரசிகர்களின் பாராட்டு கம்பீருக்கு செல்ல வேண்டும் என்று விமர்சகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.