பரபர விவாதம்
இந்த நிலையில், பரபரப்பான இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற எந்த வீரர்களை களமிறக்கலாம் என்ற விவாதம் கடந்த சில நாட்களாக சூடு பறந்தது. இந்தியா நிச்சயம் மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.
ஆடுகளங்களின் தன்மை
அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகத்துக்கு அதிகம் ஒத்துழைப்பதும், ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சில் மிரண்டு போய் துவக்கத்திலேயே 5 விக்கெட்களை இழந்ததும் தான்.
சிறப்பாக செயல்படுவார்
அதனால், இந்திய அணியின் சாஹல் - குல்தீப் இருவரில், குல்தீப் யாதவ்வை நீக்கி விட்டு முகமது ஷமியை களமிறக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர். புவனேஸ்வர் குமாரை காட்டிலும் துவக்க ஓவர்களில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்பதே இந்த யோசனைக்கு முக்கிய காரணம்.
பும்ரா - ஷமி கலக்குவார்கள்
பும்ரா - ஷமி துவக்கம் மற்றும் இறுதி ஓவர்களில் மாற்றி, மாற்றி பந்துவீசினால் ஆஸ்திரேலியா தடுமாறும் என்பதே அவர்கள் சொன்ன திட்டம். ஆனால், அதற்கு மாறாக விராட் கோலி அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், சாஹல் - குல்தீப் யாதவ் அடங்கிய அணியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறக்கி இருக்கிறார்.
சுழற் பந்துவீச்சு எடுபடுமா?
ஆஸ்திரேலிய அணி சுழற் பந்துவீச்சுக்கு தடுமாறும் என்பது உண்மை தான் என்றாலும், இங்கிலாந்து ஆடுகளங்களில் எந்த அளவு சுழற் பந்துவீச்சு எடுபடும் என்பதையும் சிந்திக்க வேண்டும். மறுபுறம் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் விக்கெட் கிடைப்பது குறைவாகவே இருப்பதாக ஒரு புகார் உள்ளது.
பின்வரிசை விக்கெட்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கூட அவர் பின்வரிசை வீரர்களின் விக்கெட்களைத் தான் எடுத்தார். அதனால், குறைந்தபட்சம் புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக ஷமியை களமிறக்கி இருக்கலாம். ஆனால், விராட் கோலி அதை செய்யவில்லை. விராட் கோலி எடுத்த இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமா இருக்குமா?