பெர்த்: பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் வரவுள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளனர்.
ஆனால் இம்முறை கட்டாயம் கைப்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரிட் பும்ரா ஏற்கவுள்ளார். அதேபோல் பெர்த் மைதானத்தில் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட போது நட்சத்திர வீரர் சுப்மன் கில் காயம் அடைந்தார்.

அவர் இதுவரை பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அனுபவ வீரரான கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் 3 நாட்களுக்கு முன்பாகவே இந்தியா ஏ அணி வீரர்களுடன் தேவ்தத் படிக்கல் நாடு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் திடீரென தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலியாவிலேயே இருக்க வைக்கப்பட்டதோடு, சுப்மன் கில் இடத்தில் களமிறக்கவும் இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கேற்ப கடந்த 3 நாட்களாக தேவ்தத் படிக்கல் சென்டர் பிட்சில் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
பின்னர் நம்பர் 4ல் நட்சத்திர வீரர் விராட் கோலியும், நம்பர் 5ல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ம் களமிறங்கவுள்ளனர். நம்பர் 6ல் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரில் மாற்று விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் துருவ் ஜுரெல் 2 அரைசதங்கள் விளாசியதோடு, பயிற்சி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
மறுபக்கம் சர்ஃபராஸ் கானுக்கு சென்டர் பிட்சில் பேட்டிங் பயிற்சி செய்யவே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் நேற்று வரை வலைப்பயிற்சியில் த்ரோ டவுன்களை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார். அதேபோல் நம்பர் 7ல் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரில் அஸ்வின் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் 3 பேர் இருக்கின்றனர்.
பெர்த் மைதானத்தில் டாப் ஸ்பின் அதிகமாக எடுபடும் என்பதால், இம்முறை அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் முதன்மை பவுலர்களாக செயல்படவுள்ளனர். இருவருக்குமே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாட அனுபவம் இருப்பதால், இளம் வீரர்களான ஆகாஷ் தீப் மற்றும் ஹர்சித் ராணா இருவருக்கும் நன்றாக வழிகாட்ட முடியும்.
இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் பெர்த் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒரு இன்னிங்ஸில் நிதீஷ் குமார் ரெட்டியால் எளிதாக 10 முதல் 12 ஓவர்களை வரை வீச முடியும். துலீப் டிராபி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், பயிற்சி ஆட்டம் என்று நிதீஷ் குமார் ரெட்டிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை இவர் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.