பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜுரல் இடம் பெறுவார் என்ற தகவல் கிடைத்து உள்ளது.
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டி விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, முதல் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தற்காலிக கேப்டனாக செயல்பட இருக்கிறார். மேலும், பயிற்சிப் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, ரோஹித் சர்மா இடத்தில் துவக்க வீரராக ஒரு மாற்று வீரரையும், மூன்றாம் வரிசை அல்லது மிடில் ஆர்டரில் சுப்மன் கில் இடத்தில் ஆட ஒரு மாற்று வீரரையும் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகியுள்ளது. இந்தியா ஏ அணிக்காக சமீபத்தில் சிறப்பாக ஆடி இருந்த துருவ் ஜுரலுக்கு மிடில் ஆர்டரில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் ஜுரல் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தாலும் பேட்டிங்கில் இந்திய அணிக்கு கை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளது இந்திய அணி நிர்வாகம். ரிஷப் பண்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார். துருவ் ஜுரல் ஃபீல்டராகவும், பேட்ஸ்மேன் ஆகவும் பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு பதிலாக துவக்க வீரராக கே எல் ராகுல் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. கே எல் ராகுலுக்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பதால், அபிமன்யு ஈஸ்வரன் துவக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.