மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆடிய துருப் ஜுரெல் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 80 ரன்களை குவித்த துருவ் ஜுரெல், 2வது இன்னிங்ஸில் 47 பந்துகளில் 19 ரன்களை எடுத்து களத்தில் இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை இருவருமே சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அப்போதே இளம் வீரரான துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் நவ.4ஆம் தேதியே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டியில் விளையாடும் வகையில் இந்தியா ஏ அணியிலும் சேர்க்கப்பட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் 4 மற்றும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருக்கிறார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சர்ஃபராஸ் கான் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அட்டாக்கிங் மோடிலேயே விளையாடி வருகிறார்.
ஏற்கனவே அப்படியான ஆட்டத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இருப்பதால், இன்னொரு வீரரையும் அதே பாணியில் விளையாட வைக்க கூடாது என்று கருதப்படுகிறது. இதனால் சர்ஃபராஸ் கான் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் முதலில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் ரசிகர்களிடையே நடந்து வந்தது.
ஆனால் அவுட் ஆஃப் சிலபஸாக துருவ் ஜுரெல் களமிறங்குவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய துருவ் ஜுரெல் சிறப்பாக விளையாடி 186 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 80 ரன்களை விளாசினார்.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதும் 47 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து 2வது நாள் இறுதி வரை களத்தில் இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற அடிப்படையை துருவ் ஜுரெல் நன்றாக கற்றுள்ளார். இதனால் ரஹானேவுக்கு சிறந்த மாற்றாக அவருக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.