மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்தியா ஏ அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் துருவ் ஜுரெல் டெய்லண்டர்களுடன் போராடி மீட்டெடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெலுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு துருவ் ஜுரெல்லை தயார் செய்யும் வகையில், கேஎல் ராகுலுடன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பராக விளையாடும் துருவ் ஜுரெலுக்கு அளிக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் மெக்ஸ்வீனி பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சீனியர் வீரரான கேஎல் ராகுல் 4 ரன்களிலும், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் டக் அவுட்டாகியும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ஏ அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 4வது ஓவரிலேயே துருவ் ஜுரெல் களத்திற்கு வந்தார். தேவ்தத் படிக்கல் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த துருவ் ஜுரெல், நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினார். புதிய பந்து தேய்மானமாகும் வரை காத்திருந்த துருவ் ஜுரெல், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும், கொஞ்சம் கூட பதற்றமடையவில்லை. டெய்லண்டர்களுடன் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்.
119 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த போது, பிரசித் கிருஷ்ணாவை ஒருமுனையில் வைத்து கொண்டே துருவ் ஜுரெல் அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினார். 118 பந்துகளை எதிர்கொண்ட துருவ் ஜுரெல் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இந்தியா ஏ அணியின் ஸ்கோரை உயர்த்திய அவர், விரைவாக ரன்களை சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தேநீர் இடைவேளைக்கு பின் 186 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்தியா ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்தியா ஏ அணி சேர்த்துள்ள 161 ரன்களில், 80 ரன்களை துருவ் ஜுரெல் விளாசி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெல் முக்கிய வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.