மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஏனென்றால் முதல்நிலை விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்க உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல் துணைக் கேப்டன் பதவி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடிய இந்திய அணியிலும், தற்போதைய இந்திய அணியிலும் 5 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
இதில் பண்ட் மற்றும் பாண்டியா இருவரும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர். இவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய 5 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் நிலை விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், பேக் அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் கொண்டு வரப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் எழுச்சி காரணமாக அவர் ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் ஏற்கனவே 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சுமார் 55 சராசரியுடன் இருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட் இல்லாத போது, இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சாம்சனுக்கு முன்னிலை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் துருவ் ஜுரெல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசி இருக்கிறார். தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து வரும் அவர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.