அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர் வீசிய ஒரு பந்து 181.6 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட்டது.
அதைக் கண்டு இந்திய ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்து சமூக வலைதளங்களில் அந்த காட்சியை பகிர்ந்தனர். ஆனால், அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. 161.3 கிலோமீட்டர் வேகம்தான் கிரிக்கெட் உலகிலேயே அதிக வேகத்தில் வீசப்பட்ட பந்து ஆகும். பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்ததே இதுவரை சாதனையாக உள்ளது.

இந்த நிலையில் முகமது சிராஜ் 181.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியதாக எழுந்த பரபரப்பில் உண்மை இல்லை என கூறப்படுகிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது முகமது சிராஜ் வீசிய 24வது ஓவரின் கடைசி பந்து 181.6 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்டதாக நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட்டது.
பந்தின் வேகத்தை அளக்கும் கருவிலோ அல்லது ஒளிபரப்பிலோ ஏற்பட்ட தவறினால் தான் முகமது சிராஜ் 181.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியதாக காட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்களும், கே எல் ராகுல் 37 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா மட்டுமே ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இரண்டாம் நாள் துவக்கத்திலும் பும்ரா மேலும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். முகமது சிராஜுக்கு விக்கெட்கள் கிடைக்கவில்லை.