கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடிய நிலையில் மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. இதில் கேப்டன் சூரியகுமார் யாதவ் 24 பந்துகளில் 39 ரன்களும், துணை கேப்டன் கில் 20 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து அபாரமாக விளையாடினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சூரியகுமார் யாதவை வெகுவாக பாராட்டினார். இது குறித்து பேசிய அவர், கடும் நெருக்கடியை சமாளித்து விளையாடக்கூடிய திறமை சூரியகுமார் யாதவிடம் இருக்கின்றது.

சில நேரம் அவர் ரன்கள் அடிக்காமல் போகலாம். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திற்கு பின்பும் அவர் மேன்மை அடைகின்றார். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சூரியகுமார் யாதாவின் பேட்டிங்கிற்கு சரியான இடமாக இருக்கும். ஏனென்றால் வேகம் மற்றும் பவுன்சை சூரியகுமார் விரும்புவார்.
எனவே சூரிய குமார் ஒரு வீரராக இந்த தொடரில் தனி முத்திரையை பதிப்பார். இதேபோன்று கில் ஆட்டத்தை பார்க்கும்போது விராட் கோலி எப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடுவாரோ அதே போல் இருக்கின்றது. நீங்கள் ஸ்கோர் கார்டை பார்க்கும்போது இவர்களது பெயர், பெரிய அளவில் உங்கள் கண்களில் படாது.
ஆனால் அவர்கள் 45 ரன்கள் எடுத்திருப்பார்கள். அது ஆட்டத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ருதுராஜ், ராகுல் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதை கில் அறிவார். இந்த காலகட்டத்தில் டி20 வீரராக இருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி ஆட்டத்தில் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அப்போதுதான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும். எனினும் கில் தற்போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய நம்பிக்கையை அது அதிகரிக்கும். ஆனால் ரன்கள் அடித்தால் மட்டுமே உங்கள் இடம் அணியில் இருக்கும். இதேபோன்று அபிஷேக் ஷர்மா தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றார். அபிஷேக் ஷர்மாவால் நிச்சயம் சதம் அடிக்க முடியும். ஆனால் அவர் எவ்வளவு வேகத்தில் சதம் அடிக்கிறார் என்பதை தான் அனைவரும் உற்று நோக்குகிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.