திருவனந்தபுரம் : தோனி போல அதிரடி ஆட்டம் ஆடி ஃபினிஷராக சிறப்பாக செயல்படும் ரிங்கு சிங்கிற்கு, அதுவே பெரிய சிக்கலாக மாறி வருகிறது. அவருக்கு அடுத்த தோனி என்ற அழுத்தத்தை கொடுக்கத் துவங்கி இருக்கிறார்கள் சிலர்.
இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங்கை கடந்த ஐந்து நாட்களாக தோனியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விமர்சகர்களும் கூட அந்த இளம் வீரரை தோனியுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதவும், விவாதங்களில் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ரிங்கு சிங் கடைசி ஓவர்களில் ஆடிய ஆட்டத்தை பார்த்து விட்டு ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்ல இந்திய டி20 அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் வரை அனைவரும் ரிங்கு சிங்கை, தோனியுடன் ஒப்பிட்டு பேசி விட்டார்கள். இதுவே அவருக்கு வினையாக மாறி விடும் எனவும் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ரிங்கு சிங்கை, தோனியுடன் ஒப்பிட்டு அவர் மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை கெடுத்து விடாதீர்கள். அவர் மிகவும் கடின உழைப்புக்கு பின் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என அனைவருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
ரிங்கு சிங் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் தன் அதிரடி ஆட்டம் மூலம் கிரிக்கெட் உலகில் பெரும் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து இந்திய டி20 அணியில் ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருகிறார்.
தற்போது நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் பங்கேற்று ஆடி வருகிறார், இதுவரை நடந்த முதல் இரண்டு போட்டிகளிலும் ரிங்கு சிங் அதிரடி ஆட்டம் ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்து இருக்கிறார்.
முதல் போட்டியில் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடியின் உச்சம் தொட்டார். அவரது அதிரடி ஆட்டம் ஒருபுறம் என்றால் அதை அவர் எந்த பதற்றமும் இன்றி நிதானமாக ஆடுவது மற்றொரு முக்கிய விஷயமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது போன்ற நிதானமான மனநிலையில் அதிரடி ஆட்டம் ஆடும் ஒரு வீரர் இருக்கிறார் என்றால் அது தோனி மட்டுமே.
அதனால், இயல்பாகவே அனைவரும் ரிங்கு சிங் ஆட்டத்தை பார்க்கும் போது தோனியின் இளமைக் காலம் நினைவுக்கு வருவதாக கூறத் துவங்கி இருக்கின்றனர். ரசிகர்கள், விமர்சகர்கள் அவரது ஆட்டம் தோனியின் ஆட்டம் போலவே இருப்பதாக சொல்லத் துவங்கிய நிலையில், சூர்யகுமார் யாதவும் இரண்டாவது டி20 போட்டி முடிந்தவுடன் ரிங்கு சிங், தோனியை நினைவுபடுத்துவதாக சூசகமாக கூறினார்.
இந்த நிலையில் தான் ஹர்ஷா போக்லே தோனியுடன் ஒப்பிட்டு அவர் வாழ்க்கையை வீணாக்கி விட வேண்டாம் என்ற அர்த்தத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து தோனியுடன் ஒப்பிட்டு வந்தால், ரிங்கு சிங்கிற்கு அழுத்தம் ஏற்படும். சில போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என்றால், "இவரா அடுத்த தோனி?" என விமர்சனம் செய்யத் துவங்குவார்கள். அதனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் அபாயமும் உள்ளது.
இது பற்றி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "ரிங்கு சிங் தோனியைப் போல் ஃபினிஷிங் செய்ததாக சில செய்திகளைப் படித்து வருகிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்த அற்புதமான திறமைசாலி அவர். ஆனால், தோனியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அந்த இளைஞன் தனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் விளையாடட்டும், மேலும், ரிங்குவாகவே இருப்பதில் மகிழ்ச்சியடையட்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.