சென்னை: இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியின் பவுலிங் போதுமானதாக இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இதனால் அடுத்த போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்கிவிட்டு, உடனடியாக குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். k
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்தது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இப்படி தோல்வி அடைந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின் இந்திய அணி தோல்வி அடையும் 2வது ஒருநாள் தொடர் இதுவாகும்.

இந்திய அணியின் தோல்விக்கு பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகளே காரணமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசுகையில், எப்படி இருந்தாலும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இருந்திருக்க வேண்டும். அடுத்தப் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்குவார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் நிதீஷ் குமார் ரெட்டியால் இப்படியொரு பவுலிங்கை வைத்து கொண்டு விளையாட முடியாது. அவர் பந்துவீசினால் சிக்சர்கள் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டியால் பெரிய சிக்சர்கள் விளாச முடியும். ஆனால் கடைசி நேரத்தில் தான் அவர் பேட்டிங் செய்ய வருகிறார். இந்திய அணியில் நம்பர் 8ல் ஹர்சித் ராணாவையும், நம்பர் 9ல் குல்தீப் யாதவையும் களமிறக்கலாம்.
ஹர்சித் ராணாவின் பேட்டிங் அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க வேண்டும். ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தால், இந்திய கட்டாயம் வென்றிருக்கும். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுகிறார்கள்.
இதனை கவனிக்காமல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் இருவரையும் அட்டாக்கில் இருந்து எடுத்துவிட்டார்கள். ஆனால் குல்தீப் யாதவ் ஏன் விளையாடவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை குல்தீப் யாதவை அட்டாக் செய்ய முயற்சித்தாலும், அவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.