மெல்போர்ன்: இந்திய டி20 அணிக்குள் சுப்மன் கில் கொண்டு வரப்பட்டதன் காரணமாக சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா ஆகிய 3 வீரர்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மொத்தமாக மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருக்கிறது.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சிவம் துபே மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக தொடர்ச்சியாக சுப்மன் கில் 11 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் சுப்மன் கில்லை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் இந்திய டி20 அணிக்குள் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளதால், 3 வீரர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதாவது சுப்மன் கில் வருகைக்கு முன்பாக தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடி வந்தார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் மட்டும் 3 சதங்களை விளாசினார்.
தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியதால், நம்பர் 3 பேட்ஸ்மேனாக திலக் வர்மா ஆடி வந்தார். இதனால் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் இறங்கி திலக் வர்மாவால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அதேபோல் ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் சுப்மன் கில் வரவு காரணமாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் இருவரும் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளனர். மறுபக்கம் திலக் வர்மா நம்பர் 3 பேட்டிங் வரிசையை இழந்து நம்பர் 5க்கு தள்ளப்பட்டுள்ளார். நம்பர் 5 பேட்டிங் வரிசையில் திலக் வர்மாவால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால் சுப்மன் கில்லை வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.