மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கருத்து தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆஸ்திரேலியாவின் 3 முன்னணி பவுலர்களையும் அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்வது எளிதாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவ.22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் காரணமாக நவ.10ல் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஏற்கனவே சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் ரன்கள் குவிக்காமல் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இரு வீரர்களும் 6 இன்னிங்ஸில் விளையாடி 100 ரன்களை கூட சேர்க்கவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் பேசுகையில், ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிச்சயம் நன்றாக ரன்களை குவிக்க வேண்டும். அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சயம் வெல்ல முடியும்.
அவர்களால் ரன்கள் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் சொதப்புவதற்கும் வாய்ப்பு இருப்பதால் கூடுதல் பயமாகவும் உள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது சாதாரண விஷயமல்ல. பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் என்று ஆஸ்திரேலியாவின் 3 தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இணைந்து அட்டாக் செய்ய உள்ளனர். அதுவும் சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும்.
அதனால் 3 பவுலர்களையும் சமாளிக்க வேண்டுமென்றால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகச்சிறந்த டெக்னிக் மற்றும் சிறந்த மனநிலையுடன் விளையாட வேண்டும். கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போது, விராட் கோலி விளையாடவில்லை. விராட் கோலி இல்லாமலேயே 32 ஆண்டுகளாக எந்த அணியும் செய்ய முடியாததை இந்திய அணி சாதித்தது. காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.
இம்முறை விராட் கோலியும் இருக்கிறார். ஆனால் அவரின் பேட்டிங் ஃபார்ம் தான் சோகத்தை அளிக்கிறது. ஏனென்றால் மிட்சல் சான்ட்னர் வீசிய ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்திருப்பது அவர் மீது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அவர் மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வர தீவிரமாக இருப்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார்.