சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். கம்பீரின் இந்த வார்த்தைகள் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் கூறியதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய அணி இழந்திருக்கிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வீழ்த்தியது. இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னெறுவதற்கான வாய்ப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுகையில், அழுத்தம் நிறைந்த சூழல்களில் இந்திய அணி வீரர்கள் அதிகமாக திணறிவிட்டனர். மெல்போர்ன் டெஸ்டை டிரா செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் அழுத்தத்தை தோல்வி ஏற்பட்டது. இதுபோன்ற அழுத்தம் நிறைந்த சூழல்களை எதிர்கொள்வதற்காக தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறோம்.
அனைத்து வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும். அதில் விளையாடவில்லை என்றால், சரியான வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் இம்முறை யார் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்களோ, அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகள் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்காக சொல்லப்பட்டதை போல் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் விராட் கோலி 9 இன்னிங்ஸில் விளையாடி 190 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அந்த 9 இன்னிங்ஸில் 8 முறையும் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளில் ஒரே மாதிரி ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அதிலும் ஸ்காட் போலண்ட் பவுலிங்கில் மட்டும் 5 முறை விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
அதேபோல் ரோஹித் சர்மா கடைசி 15 இன்னிங்ஸில் 165 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அவரின் டிஃபென்ஸ் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக விஜய் ஹசாரே தொடர் வரும் 18ஆம் தேதி வரையும், ஜனவரி 23 முதல் ரஞ்சி டிராபி தொடரும் நடக்கவுள்ளது.
இதனால் பிப்.6ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட முடியும். ஆனால் அவர்கள் 2 மாதங்களாக தீவிர கிரிக்கெட்டை ஆடி இருப்பதால், ஓய்வெடுக்கவே விரும்புவார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.
விராட் கோலி தனது டெக்னிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கு ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர் தான் சரியான களமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவரின் பேட்டிங் ஸ்டன்ஸை மாற்றினாலும், கவர் ட்ரைவ் அடிப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை. இதனால் ரஞ்சி டிராபி போட்டிகளில் ஸ்டான்ஸ்-க்கு ஏற்ப ஷாட்களை ஆடி தயாராக முடியும் என்று பார்க்கப்படுகிறது.