இந்தியா பேட்டிங்
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 255 ரன்கள் எடுத்தது. தவான் 74, ராகுல் 47 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் அணியைக் கைவிட்டனர்.
ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை
அதே போல, பந்துவீச்சில் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடிய இந்திய அணியால், ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.
படுமோசமான தோல்வி
ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் கோலி, அணித் தேர்வில் செய்த தவறான முடிவுகளால் ஏற்பட்ட குழப்பமே காரணம்.
அந்த கேள்வி
இந்த தொடருக்கு முன் இந்திய அணியில் ரோஹித் சர்மா, ராகுல், தவான் என மூன்று துவக்க வீரர்களும் நல்ல பார்மில் இருந்தனர். அதனால், அவர்கள் மூவரில் யாரை கோலி துவக்க வீரர்களாக களமிறக்குவார் என்ற கேள்வி இருந்தது.
அதிர்ச்சி அளித்த கோலி
இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் கோலி, அவர்கள் மூவரையும் களமிறக்கி அதிர்ச்சி அளித்தார். அவர்கள் மூவரும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்தனர். அதனால், பேட்டிங் வரிசையே மாறியது.
கூடுதல் பந்துவீச்சாளர் இல்லை
மேலும், அவர்கள் மூவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்பதால் கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கினார் கோலி. அதனால், அணியில் கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாத நிலை உருவானது.
நிர்பந்தம்
ஐந்து பந்துவீச்சாளர்களே 50 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்படி தனக்கு தானே பரிசோதனை என்ற பெயரில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார் கேப்டன் கோலி.
கோலி பேட்டிங் வரிசை
பேட்டிங்கில் ரோஹித், தவான், ராகுல் களமிறங்கிய பின் கோலி நான்காவதாக பேட்டிங் செய்தார். அவர் பல ஆண்டுகளாக மூன்றாம் வரிசையில் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வரும் நிலையில் தன் இடத்தை மாற்றிக் கொண்டார்.
விக்கெட் வீழ்ச்சி
அது கோலிக்கு ஒத்துவரவில்லை. அவர் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் தங்கள் வரிசையை மாற்றி ஆடியதால் விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்தால் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் சிக்கல்
கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாததால் விக்கெட் எடுக்க முடியாத சூழலில் ஐந்து பந்துவீச்சாளர்களையே கோலி மாற்றி, மாற்றி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது.
ரசிகர்கள் கோபம்
இந்திய ரசிகர்கள் கோலியின் இந்த அணித் தேர்வுக் குழப்பத்தால் கடும் கோபத்தில் உள்ளனர். அது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.