பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப்-பின் பொறுப்பான கடைசி நேர ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.
அவர்கள் இருவரும் ஃபாலோ ஆனை தவிர்த்ததை இந்திய அணியின் ஓய்வறையில் அமர்ந்து இருந்த பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர் விராட் கோலி ஆகியோர் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஃபாலோ ஆன் சிக்கல் தாண்டிய பின் ஆகாஷ் தீப் பெரிதாக ஒரு சிக்ஸ் அடித்தார். அதை பார்த்து அவர்கள் மூவரும் சிரித்து கொண்டாடினர். இது நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் அவர்கள் மூவரையும் விளாசி வருகின்றனர்.

இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா? இல்லையா? என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டதற்கு காரணமே அவர்கள் மூவரும் தான் என சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவர்களை விமர்சித்து வருகின்றனர். மற்ற வீரர்கள் பொறுப்பாக ஆடுவதை உள்ளே அமர்ந்து கொண்டு கைதட்டி சிரிக்க கூட அவர்களுக்கு தகுதி இல்லை என சிலர் குறிப்பிட்டு உள்ளனர்.
இது சற்று கடினமான கடுமையான விமர்சனமாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் முழுவதும் இது போன்ற பல விமர்சனங்களை பார்க்க முடிந்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது. அப்போது கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து அணியை மீட்டனர். கே எல் ராகுல் 84 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி 213 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து இருந்தது. இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் களத்தில் இருந்தனர். பும்ரா ஒரு சிக்ஸ் அடித்தார். ஆகாஷ் தீப் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்தார். இடையே சிங்கிள் ரன்கள் எடுத்தனர். அவர்களது ஆட்டத்தால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. 246 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தது.
ஆகாஷ் தீப் ஃபோர் அடித்து ஃபாலோ ஆனை இலக்கை கடந்த போது ஓய்வறையில் இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த காட்சியைத்தான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. நான்காம் நாள் முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 193 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆல் - அவுட் ஆனாலும் அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த அணி விரைவாக ரன் சேர்க்க முயலும். 20 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தால் அதன் பின் இந்திய அணி மழைக்கு நடுவே சுமாராக 50 ஓவர்கள் முதல் 70 ஓவர்கள் வரை இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வேண்டிய நிலை ஏற்படலாம். அதை மட்டும் சமாளித்து விட்டால் இந்தப் போட்டி டிராவில் முடிவடையும்.