அகமதாபாத் : இந்திய அணி 2023 உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என முன்னாள் கேப்டன் தோனி சில சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
தோனி 2019 உலகக்கோப்பையில் அரை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடி வரும் அவர் தற்போதைய இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியை நேரில் காண தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளது பிசிசிஐ. இதுவரை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற கேப்டன்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2011 உலகக்கோப்பை வென்ற கேப்டனான தோனிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தான் தோனி தன் சொந்த ஊரில் வழிபாடும் செய்துள்ளார்.

2019 உலகக்கோப்பை அரை இறுதியில் தோனி ரன் அவுட் ஆன பின் அழுது கொண்டே வெளியேறிய காட்சி இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்தியாவுக்கு மற்றொரு உலகக்கோப்பை வென்று கொடுக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் இருந்த தோனி, தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என தீவிர வழிபாட்டை செய்துள்ளார்.
தோனி கேப்டனாக இருந்த போதும் முக்கிய தொடர்களுக்கு முன் தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வார். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பும் வழிபாடு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதில் இதுவரை உலகக்கோப்பை வென்ற கேப்டன்களான கபில் தேவ், ஆலன் பார்டர், அர்ஜுனா ரணதுங்கா, ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், தோனி, இயான் மார்கன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.