மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி சதமடித்த போது, வர்ணனையில் இருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய வீடியோ ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
2018-19 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. முதல்முறை விராட் கோலி தலைமையிலும், 2வது முறை அஜிங்கியா ரஹானே தலைமையிலும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த இரு முறையும் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டார்.

இதனால் ஆஸ்திரேலியா அணியின் மைதானங்கள், அவர்களின் செயல்பாடுகள், விமர்சனங்களில் இருக்கும் உள்நோக்கம், பத்திரிகைகளின் செயல்பாடுகள் என்று அத்தனையும் அறிந்தவர் ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வேண்டுமென்றால், அவர்களை போலவே மோதினால் மட்டுமே முடியும் என்று வர்ணனையில் கூட தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டின் 3வது நாளில் இந்திய அணி வீரர்கள் மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தினர். சீனியர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் நடையை கட்டிய போது, நிதிஷ் குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாறு படைத்தனர்.
இந்திய அணியின் கதை முடிந்துவிட்டது என்று நினைத்த போது, 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி களத்தில் போராடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதனை மெல்போர்ன் மைதானத்தின் முதல் வரிசையில் இருந்த பார்த்த அவரின் தந்தை முத்யாலா ரெட்டி ஆனந்த கண்ணீருடன் காணப்பட்டார். 99 ரன்களில் இருந்த போது கடவுளை வணங்கி கொண்டு பதற்றத்துடன் இருந்த காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் இந்தி மொழி வர்ணனையில் ஈடுபட்டிருந்தனர். நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசிய போது, நெகிழ்ச்சியடைந்த ரவி சாஸ்திரி கண்ணீர் சிந்தினார். அதன்பின் ரவி சாஸ்திரி வர்ணனையிலேயே, உங்கள் தந்தையின் கண்களில் மட்டும் ஆனந்த கண்ணீர் வரவில்லை.. மைதானத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் கண்ணீருடன் தான் இருக்கிறான் என்று பேசியிருந்தார்.
இதன்பின் ஆட்டம் முடிவடைந்த பின் விவாதத்தில் பங்கெடுத்த ரவி சாஸ்திரி, இந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களும் பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கோன்ஸ்டாஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி என்று அனைவரும் 23 வயதிற்குள்ளாகவே இருக்கின்றனர். ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் நெருப்பாக செயல்படுகிறார்கள் என்று பாராட்டியுள்ளார்.