பிரிஸ்பேன்: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை நம்பர் 9ல் பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவு, ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய சிக்கலை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வந்த ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இருவரும் அட்டகாசமாக பேட்டிங் விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது. 4வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணி வெற்றிகரமாக ஃபாலோ ஆனை எளிதாக தவிர்த்துள்ளது. இதனால் இந்திய அணி நாளை காலை முதல் ஓவரிலேயே ஆல் அவுட்டானால் கூட, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியா அணி எச்சரிக்கையாகவே டிக்ளேர் செய்ய முடிவு எடுக்கும். ஏனென்றால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு சென்றால், பேட் கம்மின்ஸ் மிகப்பெரிய சிக்கலில் சிக்குவார். இதனால் குறைந்தது 300 ரன்களுக்கு மேல் தான் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்த முடிவு ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் பவுலர்களில் ஆகாஷ் தீப் தான் சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு பின் பும்ரா ஓரளவு பேட்டின்கில் தாக்கு பிடிப்பார். சிராஜ் தான் இருப்பதில் கொஞ்சம் மோசமான பேட்ஸ்மேன்.
ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்து வெளியேறிய பின், திடீரென சிராஜ் களத்திற்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு அப்போதைய வானிலை ஒரு காரணமாக அமைந்தது. ஏனென்றால் நிதீஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் ஆஸ்திரேலியா அணி இருக்கும் போது, ஆகாஷ் தீப்பை களமிறக்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து சிராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவரும் தன் பங்கிற்கு ஆஸ்திரேலியா பவுலர்களை விரக்தியடைய வைத்தார். ஜடேஜாவுடன் இணைந்து 4 ஓவர்கள் தாக்கு பிடித்தாலும், மழை வந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதேபோல் ஆகாஷ் தீப் ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக பேட்டிங் ஆடுகிறார். இதனால் ஆகாஷ் தீப்பின் பேட்டிங் டெக்னிக் மற்றும் அவரின் ஸ்டைல் குறித்த ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு பெரிதாக திட்டமும் இருக்கவில்லை.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப் 28 பந்துகளில் அரைசதம் அடித்தவர். அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடிய வீரரான ஆகாஷ் தீப்பை ஒழித்து வைத்து கம்பீர் ஆஸ்திரேலியா அணிக்கு ஆட்டம் காட்டியுள்ளார். இதனால் ஃபாலோ ஆன் கொடுத்துவிடலாம் என்று ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்ப்பரித்த ஆஸ்திரேலியா அணியின் கனவில் ஆகாஷ் தீப்பை வைத்து கம்பீர் கலைத்து அசத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.