சிட்னி: சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா தனது முதல் 4-விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். ஆனால், இந்த போட்டிக்கு முன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஹர்ஷித் ராணாவை கடுமையான எச்சரித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமாகச் செயல்பட்டதால், ஹர்ஷித் ராணாவின் தேர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ராணாவைத் தொடர்ந்து ஆதரித்து வந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானார். இந்நிலையில், மூன்றாவது போட்டிக்கு முன்பு, பொறுமையிழந்த கம்பீர், ராணாவிடம் நேரடியாகவும், கடுமையாகவும் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தத் தகவலை ஹர்ஷித் ராணாவின் சிறுவயது பயிற்சியாளரான ஷர்வான், ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

2025 ஆசியக் கோப்பையில் சரியாகச் சோபிக்காத நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு ஹர்ஷித் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது. முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, 12 ஓவர்கள் வீசி 86 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்றியிருந்தார். இதனால், கம்பீர் மீது அழுத்தம் அதிகரித்தது.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு ஹர்ஷித் ராணாவிடம் பேசிய கம்பீர், "ஒழுங்காகச் செயல்படு, இல்லையென்றால் அணியை விட்டு வெளியே உட்கார வைத்துவிடுவேன்" என்று நேரடியாக எச்சரித்ததாக ஷர்வான் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷர்வான் மேலும் கூறுகையில், "போட்டிக்கு முன்பு ஹர்ஷித் ராணா எனக்கு போன் செய்தார். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்குத் தனது சிறப்பான ஆட்டத்தால் பதிலடி கொடுக்க விரும்புவதாகக் கூறினார். நான் அவனிடம், 'உன்னை நீ நம்பு' என்று மட்டும் சொன்னேன்."
"சிலர், அவன் கம்பீருக்கு நெருக்கமானவன் என்று கூறுகிறார்கள். ஆனால், திறமையை எப்படி அடையாளம் காண்பது மற்றும் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்பது கம்பீருக்குத் தெரியும். அவர் பல வீரர்களுக்கு ஆதரவளித்துள்ளார், அவர்களும் அணிக்காக அற்புதங்களைச் செய்துள்ளனர். உண்மையில், அவர் ஹர்ஷித்தை மிகவும் மோசமாகத் திட்டினார். நீங்கள் யாராக இருந்தாலும், அவர் தனது செய்தியைத் தெளிவாகச் சொல்லிவிடுவார்," என்றார்.
முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த், "கம்பீரின் 'யெஸ் மேன்' என்பதால் மட்டுமே ராணாவுக்கு அணியில் இடம் கிடைத்தது" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஷர்வான், "முதலில் கிரிஸ் ஸ்ரீகாந்த் இந்த இளம் வீரரை விட்டுவிட வேண்டும். ஓய்வுக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிப்பதற்காகத் தங்கள் யூடியூப் சேனல்களைத் தொடங்கியுள்ளனர்."
"ஆனால், தயவுசெய்து தங்கள் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியுள்ள எந்தவொரு இளம் வீரரையும் இப்படி விமர்சிக்காதீர்கள். உங்களுக்கு வழிகாட்டவும், கண்டிக்கவும் உரிமை உண்டு. ஆனால், உங்கள் யூடியூப் சேனலின் பார்வைக்காக எதையும் பேசாதீர்கள்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
கம்பீரின் இந்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு, சிட்னி ஆடுகளத்தில் தனது வேகத்தாலும், பவுன்ஸாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்த ஹர்ஷித் ராணா, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த வாரம் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் விளையாட உள்ளார்.