பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சுப்மன் கில் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்பீர் மீண்டும் அவரை பாதுகாத்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கில்லுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ள கம்பீர், தற்போது ஆசிய கோப்பை நாயகனான திலக் வர்மாவை நீக்கி இருக்கிறார்.
அதற்கு பதிலாக இளம் அதிரடி வீரர் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். கம்பீரின் இந்த முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் கில் அதிவேகமாக விளையாடவில்லை என கூறி கடந்த டி20 உலக கோப்பை தொடரில் மெயின் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு கில்லுக்கு மீண்டும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.இதில் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை. மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் சாடியுள்ளனர் கடந்த t20 போட்டியில் கூட கில், ஸ்ட்ரைக் ரேட் வெறும் 117 என்ற அளவிலே இருந்தது.
இதனால் கில்லுக்கு ஐந்தாவது டி20 போட்டியில் வாய்ப்பு கொடுக்காமல் சஞ்சு சாம்சன் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.ஆனால் தற்போது கில்லை பாதுகாக்கும் விதமாக திலக் வர்மாவை நீக்கிவிட்டு ரிங்கு சிங் அணியில் கம்பீர் சேர்த்து இருக்கிறார். இதன் மூலம் கில்லுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த தொடரில் ரிங்கு சிங் மட்டும்தான் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடாமல் இருந்தார்.
இதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் சஞ்சு சாம்சன் மீண்டும் டாப் ஆர்டரில் விளையாடக் கூடாது என்பதால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், அவரை பாதுகாப்பதற்காக மற்ற வீரர்களின் வாய்ப்பை தட்டி பறிக்கக்கூடாது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கம்பீர் அணியில் பயிற்சியாளராக வந்த பிறகு அவர் மிகவும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.