டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் தனது பெயர் இல்லை என்பது முன்னதாக தெரியும் என்று நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேப்டன், பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் திட்டத்தை விளக்கியதாகவும் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 518 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் விளாசினர். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். சிறந்த ஃபார்மில் இருக்கும் ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட போதும், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்ற பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் எனது பெயர் தேர்வு செய்யப்படவில்லை என்பது முன்னதாக தெரியும் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜடேஜா பேசுகையில், எனக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது எனது கைகளில் இல்லை.
இந்திய அணி நிர்வாகம், கேப்டன் ஆகியோரே முடிவு செய்ய வேண்டும். சில நேரங்கள் அவர்களின் சிந்தனை வேறு மாதிரி இருக்கும். என்னை ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருந்ததற்கு பின் நிச்சயமாக காரணம் இருக்கும். இதைப் பற்றி என்னிடம் முன்னதாக பேசிவிட்டார்கள். அதனால் இந்திய அணி அறிவிப்பின் போது எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
கேப்டன், தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளர்கள் என்னிடம் பேசி அவர்களின் திட்டங்கள் பற்றி பேசிவிட்டார்கள். அதனால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அடுத்த முறை நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களாக என்ன செய்து வருகிறேனோ, அதனை செய்ய விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் கனவு தான்,
கடந்த முறை கடைசி போட்டியில் தோல்வியடைந்து தவறவிட்டோம்,. ஒருவேளை அடுத்த முறை விளையாட வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக முயற்சிப்பேன். இந்திய அணிக்கு எது சிறந்ததோ, அதனை செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் 2027 உலகக்கோப்பைத் தொடரின் போது ஜடேஜாவின் வயது 38 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.