மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படும் நிலையில் இந்திய அணிக்கு யார் தற்காலிக கேப்டனாக இருப்பார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் விவாதமாக இருந்தது.
அணியின் துணை கேப்டன் பும்ரா தான் அணியின் தற்காலிக கேப்டனாக இருக்க வேண்டும் என சிலர் கூறி இருந்தனர். சுனில் கவாஸ்கர் ஒருபடி மேலே போய், முதல் போட்டியில் கேப்டன் ஆடவில்லை என்றால் அந்த தொடர் முழுவதுமே பும்ரா தான் கேப்டனாக இருக்க வேண்டும், ரோஹித் சர்மா ஒரு வீரராக மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி இருந்தார்.

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவோ, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டை டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த கேப்டன் சர்ச்சை ரசிகர்கள் மத்தியிலும் பரவி இருந்தது.
அது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக பதில் அளித்தார். அவர் அளித்த பதிலில், "பும்ரா தான் அணியின் துணை கேப்டன். எனவே, அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார். ரோஹித் இல்லை என்றால் பும்ரா தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார்." என்றார்.
ரோஹித் சர்மா முதல் போட்டியில் ஆடுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், "இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. தகவல் கிடைத்தால் நிச்சயம் உங்களுக்கு சொல்வோம். இந்த தொடரின் துவக்கத்தில் தான் அது தெரிய வரும்" என்றார். இதன் மூலம், கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ரோஹித் சர்மா முதல் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பும் இருப்பது தெரிய வந்துள்ளது.
மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியில் இளம் வீரர்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "நீங்கள் இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதை பற்றி பேசுகிறீர்கள். அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோமோ, இல்லையோ, இந்திய வீரர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள்." என்றார் கம்பீர்.
மிகவும் கடினமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அதிக உள்ளூர் டெஸ்ட் போட்டி அனுபவம் இல்லாத ஹர்ஷித் ரானாவை வேகப்பந்துவீச்சாளராக தேர்வு செய்து இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "அவர் போதிய அளவு பந்து வீசி இருக்கிறார். ஒரு வேகப்பந்துவீச்சாளர் புத்துணர்ச்சியுடன் இருக்கிறாரா? என்பது தான் முக்கியம். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறோம். எனவே, பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அவர் 5 போட்டிகளிலும் ஆடக்கூடிய திறன் பெற்று இருப்பதை உறுதி செய்து உள்ளனர்." என்றார்.