அடிலெய்டு: இந்திய அணியின் பேட்டிங் வரிசை நம்பர் 8 வரை வேண்டும் என்பதற்காக நம்பர் 1 ஸ்பின்னரான குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் எடுக்காமல் கம்பீர் புறக்கணித்து வருவது கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் கம்பீர் மற்றும் சுப்மன் கில் கூட்டணி ரசிகர்கள் கடுமையான சாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தாலும், இரு தோல்விகளுக்கும் பிளேயிங் லெவனில் செய்த தவறுகளே காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 ஆல்ரவுண்டர்களை சேர்த்திருக்கிறார் கவுதம் கம்பீர். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என்று மூன்று வீரர்களையும் சேர்த்தது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இவர்களில் மூவரில் நிதீஷ் குமார் ரெட்டி பெரியளவில் பவுலிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.
ஒரே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரு பெரிய ஜாம்பவான்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது இந்திய அணி நிர்வாகம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் வரிசை நம்பர் 8 வரை இருக்க வேண்டும் என்பதில் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். ஆனால் நம்பர் 8ல் வரும் பேட்ஸ்மேனுக்கு தேவை இருக்கிறதா என்பதே விவாதமாக உள்ளது.
அந்த இடத்தில் நம்பர் 1 ஸ்பின்னரான குல்தீப் யாதவை சேர்த்திருக்க வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை பார்த்த பிறகும் கூட குல்தீப் யாதவை சேர்க்காமல் தவறு செய்துவிட்டோம் என்று கேப்டன் சுப்மன் கில் ஒப்புக் கொள்ளவில்லை.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா தனது திறமையை நிரூபித்துவிட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும், ஹர்சித் ராணா தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். இதனால் பிளேயிங் லெவன் தேர்வில் கம்பீரின் தலையீடு அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் சாடி வருகின்றனர்.