மும்பை: டெல்லி அணிக்காக விளையாடிய போது கவுதம் கம்பீர் ஒருமுறை கோபம் வந்து டிரக் டிரைவர் ஒருவருடன் காலரை பிடித்து சண்டையிட்டது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதேபோல் கம்பீருடன் ஒரே அணியில் விளையாடினாலும், அவர் நண்பர் அல்ல என்றும் ஆகாஷ் சோப்ரா தெளிவாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அந்த பொறுப்புக்கு கவுதம் கம்பீர் வந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

அதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி முதல் ஜூனியர் வீரரான யாஷ் தயாள், துருவ் ஜுரெல் வரை அனைவரும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்திய அணி வங்கதேச அணியை ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் அக்ரஸிவ் ஸ்டைல் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார். அதில், நானும் தொடக்க வீரர்.. அவரும் தொடக்க வீரர் என்பதால், நாங்கள் இருவரும் நேரடியாக ஒரே இடத்திற்கான போட்டியில் இருந்தோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் எனது நண்பர் கிடையாது. ஆனால் கம்பீர் கிரிக்கெட் மீது தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார்.
கிரிக்கெட் பயிற்சியில் ஒவ்வொரு நாளும் முன்னேறி கொண்டே வந்தார். அதேபோல் போட்டிகளிலும் ஏராளமான ரன்களை குவித்திந்தார். டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று இதயத்தை ஜெர்சியில் வைத்திருந்தார். அதேபோல் மிக எளிதாக கோபமடையக் கூடியவர். அப்போதைய டெல்லி அணி மிகவும் சிறந்த வீரர்களை கொண்டது.
எந்த அளவிற்கு சிறந்த வீரர் என்றால், விராட் கோலி அல்லது தவான் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது வீரேந்தர் சேவாக் தொடக்க வீரராக களமிறங்குவதற்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் டெல்லி அணிக்காக சேவாக் நம்பர் 4ல் தான் களமிறங்கினார். கோபம் தான் கவுதம் கம்பீரின் முக்கியமான குணமாகவே இருந்தது.
அவர் எந்த நேரத்தில் கோபமடைவார் என்று யாருக்கும் தெரியாது. ஒருமுறை டிரெக் டிரைவர் ஒருவருடன் சண்டையிட்டார். காரில் இருந்து இறங்கி சென்று, அந்த டிரக்கில் ஏறி ஓட்டுநரின் காலரை பிடித்து சண்டையிட்டது அதிர்ச்சியடைய வைத்தது.அப்போது நான், கம்பீர்.. என்ன செய்கிறார்.. சின்னப் பையனாக இருந்து கொண்டு டிரக் ஓட்டுநருடனா சண்டைக்கு செல்வது என்று கேள்வி கேட்டேன்.
ஆனால் கம்பீர் மனதளவில் மிகவும் நல்ல மனிதர். பாரம்பரியமிக்க பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர். அவ்வளவு பணக்கார சிறுவனிடம் கிரிக்கெட் மீது அவ்வளவு காதல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருநாள் முழுக்க கூட கம்பீர் மைதானத்தில் இருக்க தயங்க மாட்டார். தங்கத்தில் தாங்கும் அளவிற்கு அவரின் குடும்பத்திடம் செல்வங்கள் இருந்த போது, வேறு ஒரு புதிய பாதையை தேர்வு செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட அபினவ் பிந்த்ராவின் பயணத்தை போன்ற ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.