மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 3 என சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்ட போது, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக பதில் அளித்தார். அது மோசமான தோல்வி தான் என்றும், தங்கள் மீதான விமர்சனத்தை இரு கரத்தை விரித்து ஏற்றுக் கொள்வதாக அவர் கூறி இருக்கிறார்.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதற்கட்டமாக பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் அடங்கிய குழு இன்று ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிச் செல்கிறது. அதற்கு முன் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதில் அளித்தார். இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது பற்றியும், அதனால் இந்திய அணியின் மீது கடும் விமர்சனம் இருப்பது பற்றியும் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "நாங்கள் முற்றிலும் வீழ்த்தப்பட்டோம். அதை நான் மறுத்துப் பேசப் போவதில்லை. எங்கள் மீதான விமர்சனங்களை நாங்கள் இரு கரத்தை விரித்து ஏற்றுக் கொள்கிறோம். இங்கிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்புகிறோம்." என்றார். மேலும், ரோஹித் சர்மாவுடனான தனது உறவு சிறப்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், முதல் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பது உறுதியாகவில்லை எனவும், அவர் ஆடாத பட்சத்தில் கே எல் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் துவக்கம் அளிப்பார்கள் என்றும் கூறினார் கவுதம் கம்பீர். பிளேயிங் லெவனில் யாரை ஆட வைப்பது என முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஐந்தில் நான்கு போட்டிகளில் வென்றால் தான் இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எந்த சிக்கலும் இன்றி நேரடியாக தகுதி பெற முடியும். அது பற்றிய கேள்விக்கு, "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒவ்வொரு டெஸ்ட் தொடரையும் வெல்வதே எங்கள் நோக்கம்" என்றார் கவுதம் கம்பீர்