மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்பின் 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இதனால் டி20 கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளை எந்த அணி வெல்கிறதோ, அந்த அணியே தொடரை கைப்பற்றும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அவருக்கு பவுலிங் செய்ய சூர்யகுமார் யாதவ் வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால் பேட்டிங்கில் 23 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 49 ரன்களை விளாசினார். இந்த நிலையில் அடுத்த 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் இனி தேவையில்லை என்று இந்திய அணி நிர்வாகமே கூறி இருக்கிறது. அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குல்தீப் யாதவ் இந்திய ஏ அணிக்காக விளையாட தேர்வாகி இருக்கிறார். இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாட இருக்கிறார். அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
திடீரென குல்தீப் யாதவ் இந்திய அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்படுவதற்கு கவுதம் கம்பீர் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஒருநாள் தொடரிலும் குல்தீப் யாதவ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடி இருந்தார். தற்போது டி20 தொடரிலும் குல்தீப் யாதவ் பெஞ்ச் செய்யப்பட்டதால், அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.