பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தால் கவுதம் கம்பீருக்கு அது கடும் அழுத்தத்தை அளிக்கும். அவர் இதுவரை கட்டி காப்பாற்றி வந்த பிம்பம் உடைந்து விடும். குறிப்பாக இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய அணியை சீண்டுவதற்கு தயாராகவே இருக்கிறது.
அப்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எந்த அளவுக்கு கட்டுப்பாடுடன் இருந்து, போட்டியை வெல்வதில் கவனம் செலுத்துகிறார் என்பதிலேயே அவரது வெற்றி அடங்கி உள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்பதற்கு முன் மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணி அதன் பின் ஒரு தோல்வியை கூட சந்திக்காது என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அவர் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்து இருக்கிறார்.
அவர் பயிற்சியாளராக பதவியேற்ற பின் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
அதற்கு கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டாலும், பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின் செய்யப்பட்ட மாற்றங்கள் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்தன. குறிப்பாக அவர் இந்திய அணியில் அதிக ஆல் ரவுண்டர்கள் இடம் பெற வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்றும் திட்டமிட்டு இருந்தார்.
அதை இந்திய வீரர்கள் செயல்படுத்த முயன்ற போது, இந்திய அணி தோல்வி அடைந்தது. எனவே, கம்பீர் தனது பிடிவாதமான திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து எதிரணிக்கு அழுத்தம் அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியும்.
இந்த தொடரில் இந்தியா தோல்வி அடைந்தாலும், ஐந்து போட்டிகளில் குறைந்தது இரண்டு வெற்றிகளை பெற்றால் தான் கம்பீர் தன் மீது இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லையெனில் பிசிசிஐ முதல் ரசிகர்கள் வரை அனைத்து தரப்பில் இருந்தும் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும்.
இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "ஒரு பெரிய அணியை வழி நடத்துவது அத்தனை எளிது அல்ல. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு நன்றாக இருந்தால், அனைவரும் அவரை பாராட்டுவார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் அவரது பொறுமையையும், எந்த சூழ்நிலையிலும் கட்டுக்கோப்பாக இருப்பதையும் சோதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை." என்றார்.
மேலும், "கம்பீர் வெளியில் நடக்கும் விஷயங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், இந்த பரீட்சையில் அவர் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இந்த தொடர் அவர் எதிர்பார்ப்பது போல நடக்கவில்லை என்றால் அவர் அதிக விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும்." என்றார் ஹர்பஜன் சிங்.