மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் ஆறு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கேள்விகளால் துளைத்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அடுத்த கேப்டன் குறித்தும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. எனவே அடுத்த டெஸ்ட் அணி கேப்டன்? யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு இருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகும் நிலையில் அவர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை அவர் ஓய்வு பெறாமல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆட முடிவெடுத்தாலும் அவர் ஒரு வீரராகவே ஆடுவார். ஏனெனில், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி புதிய கேப்டனுடன் தான் விளையாட வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்திய டெஸ்ட் அணி தற்போது தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டனை கம்பீர் எப்படி தயார் செய்யப் போகிறார்? யாரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளார்? என பிசிசிஐ சார்பில் கேள்வி முன்வைக்கப்பட்டு இருந்தது. கம்பீர் அதற்கு என்ன பதில் கூறினார் என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.
தற்போது பும்ரா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதால் அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. எனவே, ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பாரா? என்ற கேள்வி உள்ளது.
மறுபுறம் சுப்மன் கில்லை மூன்று வித இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கவும் பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், அவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அத்தனை அனுபவத்தை பெறவில்லை. வேறு சிலரோ ரிஷப் பண்ட் தான் தற்போது ஆடிவரும் டெஸ்ட் வீரர்களில் சிறந்த வீரராக இருக்கிறார். எனவே, அவரை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த மூவரில் யார் அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் என்ற முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருக்கிறார். ஒரு பக்கம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த சோகம், மறுபுறம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டிய அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அடுத்த டெஸ்ட் அணி கேப்டனை அடையாளம் காண வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.