சிட்னி: இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி 3வது தொடரில் வரலாற்று தோல்வியை அடைந்திருக்கிறது. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீரை நீக்க வேண்டும் என்ற குரல்கள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்று கொண்டார். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் இந்திய அணியை உச்சத்தில் அமர வைத்துவிட்டு ராகுல் டிராவிட், அந்த பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதன்பின் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டார்.

கம்பீர் கொண்டு வரப்பட்ட போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு போதுமான அனுபவம் கிடையாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் கம்பீரின் குழுவில் கொண்டு வரப்பட்ட மோர்னே மோர்கல், ரியான் டென்டஸ்காட்டே ஆகியோருக்கு இந்திய மைதானங்கள் குறித்து தெளிவு இருக்கவில்லை. அபிஷேக் நாயரை பொறுத்தவரை வெளிநாட்டு பிட்ச்களில் ஆடிய அனுபவம் இல்லை.
ஸ்பின்னர்களுக்கான ஆலோசகராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி சிக்கலை சந்திக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. அதற்கேற்ப இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலமாக 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது.
அப்போதே கம்பீர் மீது விமர்சனங்கள் குவிந்த நிலையில், பிசிசிஐ தரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. 92 வருடத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அப்போது அஜித் அகர்கர் மற்றும் ஜெய் ஷா இருவரும் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மாவிடம் விளக்கம் கேட்டறிந்தனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியிடம் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து பார்டர் கவாஸ்கர் டிராபியையும் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது.
அதேபோல் தொடர்ச்சியாக 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி, இம்முறை முன்னேறவில்லை. இதற்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இந்திய அணி அடைந்த தோல்வியே காரணம். இந்த 2 தோல்விகளும் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் நேர்ந்திருக்கிறது. பயிற்சியாளராக பொறுப்புக்கு வந்த 6 மாதங்களில் 4 வரலாற்று தோல்விகளை கம்பீர் பெற்று கொடுத்துள்ளார்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீரை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.