மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் குழு மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கவுதம் கம்பீர் பதவி ஏற்றது முதல் அவருக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு அளிக்கப்படாத அதிகாரங்கள் கூட கவுதம் கம்பீருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் இந்திய அணி இலங்கையில் ஒருநாள் தொடரிலும், இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியிடமும் அடுத்தடுத்து ஒயிட் வாஷ் தோல்விகளை சந்தித்து இருப்பது பிசிசிஐ-ஐ தடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதை அடுத்து இந்திய அணி அடுத்து எப்படி தோல்வியில் இருந்து மீண்டு வரப் போகிறது? எப்படி ஒவ்வொரு முக்கிய தொடரையும் அணுகப் போகிறது? என்ற திட்ட முன் வரைவை அளிக்குமாறு கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ உத்தரவிட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் கவுதம் கம்பீர் இதற்கு முன்பு இருந்தது போல முழு சுதந்திரத்துடன் இருக்க முடியாது என தெரிய வந்துள்ளது.
இனி இந்திய அணியின் தோல்விகளுக்கு அவர் நிச்சயம் பிசிசிஐ-க்கு பதில் அளிக்க வேண்டும். இத்துடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வானளாவிய அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் கவுதம் கம்பீர் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்து இருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போதும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு கொண்டே இருந்தது. போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப இடது கை - வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றிக் கொண்டே இருந்தார். ஆனால், அது வேலை செய்யவில்லை.
இடது கை - வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஆடுவது என்பது முன்பு ஒருநாள் போட்டிகளிலும், இப்போது டி20 போட்டிகளிலும் நடைமுறையில் உள்ள ஒரு வியூகம் ஆகும். ஆனால், அது டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் பலன் அளிக்காது. அப்படி இருந்தும் கவுதம் கம்பீர் டி20 போட்டி போல டெஸ்ட் போட்டியிலும் பேட்டிங் வரிசையை மாற்றுவதில் குறியாக இருந்தார்.
அடுத்த நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வின் போதும் கம்பீர் தன்னிச்சையாக சில வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார். இப்படி கம்பீர் கேட்ட அதிகாரங்கள் அனைத்தையும் அளித்தும் அவரது மேற்பார்வையில் இந்திய அணி பெரிய தோல்விகளை சந்தித்து இருப்பதால் அவரது அதிகாரத்தை குறைக்க உள்ளது பிசிசிஐ.