மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். நான் பயிற்சியாளராக பதவி ஏற்று கொண்ட முதல் நாளிலிருந்து என்னுடைய கொள்கையே இதுதான்.

இலங்கைத் தொடரில் இருந்து தற்போது வரை t20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையை நான் அடிக்கடி மாற்றி வருகின்றேன். என்னை கேட்டால் பேட்டிங் ஆர்டர் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயம். டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களை தவிர மற்ற இடங்கள் எதுவும் நிலையானது கிடையாது. பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து அனைத்தையும் சூழலுக்கு ஏற்ப நாம் மாற்ற வேண்டும்.
எனவே வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். டி 20 கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்தோம் என்பது முக்கியம் கிடையாது. எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினோம் என்பதுதான் முக்கியம். ஆனால் சிலர் இதை தவறாக புரிந்து கொள்கிறார்கள். பேட்டிங் ஆர்டர் ரன்கள் மற்றும் தாக்கம் இது குறித்து சரியான புரிதல் யாருக்கும் இருப்பதில்லை.
இதனால்தான் நான் பயிற்சியாளராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து பேட்டிங் ஆர்டரில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றேன். இப்படித்தான் நாங்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுவோம். நாங்கள் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ரன்கள் ஆகியவற்றை குறி வைத்து விளையாடுவது கிடையாது.
எங்கள் அணியின் பேட்டிங் வரிசையை பலரும் ஆக்ரோஷமாக இருக்கிறது என்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் பேட்டிங்கை விட பவுலிங் தான் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஏனென்றால் பும்ராவை முதல் ஆறு ஓவரில் யாரும் பெரிய அளவு பயன்படுத்துவது கிடையாது. நாங்கள் பெரும்பாலான ஓவர்களை பவர் பிளேவிலே கொடுத்து விடுகிறோம்.
நாங்கள் பேட்டிங் ஆக்ரோஷத்துக்கு மட்டும் பெயர் போனவர்கள் கிடையாது.ஒட்டுமொத்தமாகவும் இது போல் ஆக்ரோஷமாக நாங்கள் செயல்படும் அணி என்ற பெயரை வாங்க விரும்புகிறேன். இதனால் தான் பும்ராவுக்கு முதல் 6 ஓவர்களில் மூன்று ஓவர்களை வழங்கி விடுகின்றோம். எனவே இது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க வேண்டும்.
ஆசிய கோப்பையில் இந்த யுத்தி நன்றாக எங்களுக்கு கை கொடுத்தது. பும்ராவை பவர்பிளேவில் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் வெற்றியை பெறுகின்றோம். இதன் மூலம் நடுவரிசையில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவுக்கு அதிக ஓவர்களை நாங்கள் தருகின்றோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.