பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இதில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனும் தமிழக வீரருமான ஸ்ரீகாந்த், கௌதம் கம்பீரை விமர்சித்து இருந்தார்.
ஆனால் இந்த விமர்சனத்திற்கு மதிப்பளிக்காத கௌதம் கம்பீர் ஸ்ரீகாந்தை கடுமையாக வார்த்தையை பேசி திட்டி விட்டார். இது சர்ச்சையை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் ஸ்ரீகாந்தை திட்டியதற்கு பயிற்சியாளர் கம்பீர், முன்னாள் கிரிக்கெட் வீரர் பல்வின்டர் சாந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக விமர்சனம் செய்தவர்களை திட்டுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்ரீகாந்த் பேச்சுக்கு என ஒரு ஸ்டைல் இருக்கிறது.
அவருடைய பேட்டிங் போல் தான் அவருடைய பேச்சும் இருக்கும். அதை அனைவருமே ரசிக்க தான் செய்கிறார்கள். சில சமயம் சில நேரம் கொஞ்சம் ஓவராக பேசி விடலாம். ஆனால் அதற்காக விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டுக்காகவும், கிரிக்கெட்டுக்காகவும் போராடிய வீரர்கள் அவர்கள்.
ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் என்றால், அதை நல்லபடியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மரியாதை கொடுத்து முழு மனதுடன் கேளுங்கள். ஒரு தலைமை பயிற்சியாளராக நீங்கள் உங்களுடைய கவனத்தை களத்தில் தான் வைக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி அதற்கு பதில் சொன்னீர்கள் என்றால், உங்களுடைய முக்கிய குறிக்கோள் பாதிக்கப்படும்.
ஸ்ரீகாந்த் தொடர்பான பேச்சுக்கு நீங்கள் வெளிப்படையாக மீடியா முன் பேசியதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு பயிற்சியாளர் என்பது ஒட்டுமொத்த அணியின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். பயிற்சியாளருக்கு பொறுப்பும், மரியாதையும் இருக்க வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட ஈகோவை காட்டுவதற்கு இடம் இது அல்ல. உங்களுடைய பணியை ஏற்கனவே செய்தவர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் அறிவுரைகளை கேட்பதில் தவறு கிடையாது.
கவனமாக இருப்பதுதான் ஒரு வீரருக்கு அழகைத் தவிர, அதற்கு எதிர்வினை ஆற்றுவது கிடையாது. நான் கம்பீரை அண்டர் 19 கிரிக்கெட் களத்தில் பயிற்சியாளராக வழி நடத்த இருக்கின்றேன். அப்போது நான் களத்தில் மட்டுமே நீ குறியாக இருக்க வேண்டும் என்று சொல்வேன். தற்போது அவர் பயிற்சியாளராக மாறிவிட்டார். இப்போதும் நான் அதையேதான் சொல்கின்றேன் என பல்விந்தர் சாந்து தெரிவித்துள்ளார்.