மும்பை: இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளை ஓய்வறையில் இருந்தே தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கட்டுப்படுத்த விரும்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக சீனியர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டிவிட்டு, இளம் வீரரான சுப்மன் கில்லை கேப்டனாக பிசிசிஐ கொண்டு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்ட முதல் தொடரிலேயே தோல்வி அடைந்திருக்கிறது. சுப்மன் கில்லுக்கு பெரிதாக அனுபவம் இல்லாத சூழலில், பலரும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.

ஏனென்றால் தொடக்கம் முதலே கவுதம் கம்பீர் இந்திய அணியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கம்பீர் விரும்பினார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பார்டர் கவாஸ்கர் டிராபி ஆகியவற்றில் கம்பீர் முடிவுகளை ரோகித் சர்மா முழுமையாக ஏற்கவில்லை.
இதன் காரணமாகவே அஜித் அகர்கர் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதால், ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா உடனடியாக நீக்கப்பட்டார். அவரிடம் தொடக்கம் முதலே கேப்டன்சியில் இருந்து நீக்குகிறோம் என்று பேசாமல், திடீரென அஜித் அகர்கர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் முழு ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வந்த ரோகித் சர்மா சோகம் அடைந்தார். இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்ட போதும் கூட, அவருக்கு யாரும் வாழ்த்து கூறவில்லை. இதனால் சுப்மன் கில் கேப்டன்சி நியமனத்திற்கு பின்னணியில் கம்பீர் இருப்பதாகவே பார்க்கப்பட்டது.
அதேபோல் ஜூனியர் வீரர்களுடன் அதிக நெருக்கம் காட்டும் கம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோரிடம் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை. தொடக்கம் முதலே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையிலான உறவில் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா இடையே சிக்கல் இருந்துள்ளது. இதன் காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கும் டிராவிட்டுக்கு நன்றி கூறி இருந்தார் ரோகித் சர்மா.
தற்போது ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருப்பதன் மூலமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவர் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவரின் ஓய்வு அறிவிப்பு எப்போது என்ற கேள்வியை ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன. இதனால் கம்பீர் இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணியையும் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சீனியர் வீரர்களை ஓரம்கட்ட முடிவு செய்து காய் நகர்த்துவதாக பார்க்கப்படுகிறது.