அடிலெய்டு: இந்திய அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை ஓரம்கட்டுவதற்காக அக்சர் படேலுக்கு வாய்ப்புகள் அள்ளிக் கொடுக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவர் ஒருநாள் தொடருக்கு தேர்வாகவில்லை.

அவருக்கு பதிலாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் அக்சர் படேலுக்கு நம்பர் 5 பேட்டிங் வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் அக்சர் படேல் சொதப்பிய நிலையில், 2வது போட்டியில் 41 பந்துகளில் 44 ரன்களை சேர்த்திருக்கிறார்.
ஆனால் இரு போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. பவுலிங்கில் ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடும் போது இரு வீரர்களுமே ஒரே அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றனர். 2027 உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்.
விராட் கோலிக்கு நிகரான ஃபிட்னஸ் உடன் ஜடேஜா இருந்து வரும் நிலையில், வேண்டுமென்றே இந்திய அணியில் இருந்து அவர் ஓரம்கட்டப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜடேஜாவுக்கான மாற்று வீரரை தேடுகிறோம் என்று கூறினாலும் கூட, ஒரே நேரத்தில் இரு ஆல்ரவுண்டர்களை தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா என்றும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த திட்டத்திற்கு பின் பயிற்சியாளர் கம்பீர் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பயிற்சியாளராக கம்பீர் வந்த நாள் முதலே, சீனியர் வீரர்களுடன் ஒத்துப் போகவில்லை. அனைத்து முடிவுகளையும் தாமே எடுக்க வேண்டும் என்று கம்பீர் தீவிரமாக இருப்பதால், அதற்கு சீனியர்கள் இடையூறாக இருப்பதாக கருதி வந்தார். இதனால் அகர்கர் மூலமாக அழுத்தம் கொடுத்து விராட் கோலி, ரோகித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து காலி செய்தார்.
அதே ஃபார்முலாவை ஜடேஜாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் செய்து வருவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா அதிகளவில் நம்பர் 5 பேட்டிங் வரிசையில் களமிறங்கியதே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்த போதும் கூட, அக்சர் படேல் அளவிற்கு நம்பர் 5 பேட்டிங் வரிசையில் வாய்ப்பு அளிக்கப்பட்டதில்லை. இதனால் ஜடேஜாவை விட சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்க கம்பீர் இந்த யுக்தியை பின்பற்றி வருவதாக பார்க்கப்படுகிறது.