மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒரு கபடதாரி என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக பேசி இருந்தார். அவ்வாறு பேச என்ன காரணம்? என அவர் மீண்டும் விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் கவுதம் கம்பீர் பற்றி அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். இது பற்றி மனோஜ் திவாரி பேசுகையில் -
"நான் ஏன் கம்பீரை கபடதாரி என்று கூறினேன்? நீங்கள் அவர் அளித்த பேட்டி ஒன்றை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒரு பேட்டியில் ஐபிஎல் தொடரில் இருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல. வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தியா குறித்து எந்த விதமான உணர்வுகளும், மதிப்புகளும் இல்லை. அவர்கள் பணத்தை சம்பாதித்து விட்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார்."

"ஆனால், அவர் இந்திய அணிக்கு உதவி பயிற்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டி வந்தபோது அத்தனை இந்திய பயிற்சியாளர்கள் வரிசையில் இருக்கும் போது, அவர் ஏன் ரியான் டென் டோஷே மற்றும் மோர்னே மோர்கலை தேர்வு செய்தார்? அவர் கேட்ட அனைத்து பயிற்சியாளர்களும் அவருக்கு அளிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் சரியான முடிவுகளையும், வெற்றிகளையும் பெற்றுத்தர முடியவில்லை. அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் நான் அவரை கபடதாரி என்று கூறினேன்." என்று கூறி இருக்கிறார் மனோஜ் திவாரி.
கவுதம் கம்பீரை மனோஜ் திவாரி கபடதாரி எனக் கூறிய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் நிதிஷ் ராணா மற்றும் ஹர்ஷித் ராணா கவுதம் கம்பீருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு மனோஜ் திவாரியை விமர்சித்து இருந்தனர். அது பற்றியும் மனோஜ் திவாரி விளக்கம் அளித்து இருக்கிறார்.
"நிதிஷ் ராணா ஏன் கம்பீரை ஆதரிக்க மாட்டார்? ஆஸ்திரேலியாவில் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக அணியில் தேர்வு செய்யப்பட்டார் ஹர்ஷித் ராணா. அது எப்படி நடந்தது? ஆகாஷ் தீப் என்ன தவறு செய்தார்? அவர் வங்கதேச அணிக்கு எதிராகவும், நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்து வீசும் கனவுடன் அவர் இருந்திருப்பார்."
"ஆனால், ஹர்ஷித் ராணாவுக்காக ஆகாஷை அணியில் இருந்து நீக்கினீர்கள். ஹர்ஷித் ராணாவுக்கு முதல் தரப் போட்டிகளில் ஆடிய அனுபவமும் இல்லை. ஆனால், ஆகாஷ் தீப் சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கிறார். இது நிச்சயமாக ஒரு தலைப்பட்சமான அணித் தேர்வு. அதனால் தான் ஹர்ஷித் கம்பீரை ஆதரிக்கிறார்."
"நான் எந்த வகையிலும் தவறாக பேசவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் கம்பீருக்கு ஆதரவாக இறக்கி விடப்பட்ட பணம் கொடுத்து நடத்தப்படும் கருத்துருவாக்கத்துக்கு எதிராகத்தான் நான் பேசுகிறேன். இதற்கு முன் எப்போதும் இப்படி நடந்ததில்லை. நாம் உண்மையைப் பேசும்போது பலரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். ஆனால், அவர்களுக்கு என்னை பற்றி தெரியாது நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன்."
"ரஞ்சி டிராபி போட்டியில் நான் கம்பீருடன் சண்டையிட்ட போது கம்பீர் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை அனைவரும் கேட்டு இருப்பார்கள். அவர் சவுரவ் கங்குலியை பற்றியும், எனது குடும்பத்தினரை பற்றியும் மோசமாக பேசினார். ஆனால், அவரை சிலர் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றி தான் நான் பேசுகிறேன்."
"அணித் தேர்வில் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று நான் சொல்கிறேன். ஹர்ஷித் ராணாவுக்காக ஆகாஷ் தீப் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஹர்ஷித் ராணா சிறப்பாக செயல்பட்டு இருந்தால் அவரை ஏன் அந்தத் தொடரின் பாதியில் நீக்கினீர்கள்? ஆகாஷ் தீப்புக்கு குரல் கொடுக்க யாருமில்லை என்பதால் இதெல்லாம் நடந்துள்ளது." என்றார் மனோஜ் திவாரி.